தலைவரின் அனுமதியின்றி ஸ்ரீ.சு.க மத்திய செயற்குழு கூட தடையுத்தரவு!!
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரது அனுமதியின்றி அக் கட்சியின் மத்திய செயற்குழு கூடுவதற்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் ஐனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஷேட உரையொன்றை ஆற்றினார்.
அதில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்புமனு வழங்கியதில் தனக்கு உடன்பாடில்லை எனவும் தான் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை எனவும் குறிப்பிட்டார்.
அத்துடன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பாரபட்சம் இன்றி நடுநிலை வகிக்கப் போவதாகவும் அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, அவசர ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நேற்று நடத்திய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் ஜனாதிபதியின் இந்த கருத்து குறித்து கவலை வெளியிட்டார்.
உடனடியாக கட்சியின் மத்திய செயற்குழுவை கூட்டி எதிர்வரும் தேர்தல் தொடர்பில் ஆராயவுள்ளதாகவும் கூறினார்.
இதன்படி இன்று அக் கட்சியின் மத்திய செயற்குழு விஷேட சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவால் மத்திய செயற்குழுவைக் கூட்ட வேண்டாம் என எழுத்து மூலம், பொதுச் செயலாளருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தின் பிரதி, இம் முறை தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர், மேல் மாகாண சபை உறுப்பினர் பிரசன்ன சோலங்காராய்ச்சியால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி யாப்பின் பிரகாரம் மத்திய செயற்குழுவைக் கூட்ட, அக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கே முடியும் எனவும் அவர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
இதனால் அனுரபிரிய தர்ஷன யாப்பாவால் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டப்பட்டமை சட்ட விரோதமானது எனவும், அதனை இரத்துச் செய்ய உத்தரவிடுமாறும் மனுதாரரால் கோரப்பட்டுள்ளது.
இதனையடுத்து விடயங்களை ஆராய்ந்த கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இந்த கூட்டத்தை நடத்த எதிர்வரும் 29ம் திகதி வரை தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Average Rating