மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை: புனே திரைப்படக்கல்லூரி மீது தாக்குதல் – 5 பேர் கைது!!
மராட்டிய மாநிலம் புனேயில் மத்திய அரசின் சினிமா மற்றும் டெலிவிஷன் தொழில் நுட்ப கல்லூரி செயல்படுகிறது. இங்கு பயிலும் மாணவர்களில் ஒரு பகுதியினர் கல்லூரி இயக்குனர் மற்றும் நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்தி வந்தனர்.
தங்கள் பாட திட்டத்தில் ஒருதலைபட்சமாகவும், அநீதியாகவும் நிர்வாகம் செயல்படுவதாக கண்டித்து கல்லூரி இயக்குனர் மற்றும் ஊழியர்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதனால் அவர்கள் வெளியில் எங்கும் செல்ல முடியாமல் 8 மணி நேரம் தங்கள் அறையிலேயே சிறை வைக்கப்பட்டனர்.
மேலும் அவர்கள் அலுவலகத்தை விட்டு வெளியேற முயன்ற போது மாணவர்கள் தடுத்தனர். மனித சங்கிலி போல் நின்று இருந்தனர். அப்போது திடீர் என்று வன்முறை ஏற்பட்டது. கல்லூரியில் இருந்த டேபிள்–நாற்காலிகள், கம்ப்யூட்டர்கள் மற்றும் ஜன்னல்– கண்ணாடிகளை அடித்து நொறுக்கி சூறையாடினார்கள்.
நிலைமை மோசமானதைத் தொடர்ந்து கல்லூரி இயக்குனர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். உடனே போலீசார் விரைந்து சென்று கல்லூரிக்குள் புகுந்தனர். வன்முறையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடவடிக்கையில் இறங்கினர். அதன் பிறகு வன்முறை கட்டுக்குள் அடங்கியது.
இந்த வன்முறை தொடர்பாக 47 பேர் மீது கல்லூரி இயக்குனர் புகார் செய்தார். அவர்களில் 17 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் 5 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.
இந்த கல்லூரி இயக்குனராக பா.ஜனதாவை சேர்ந்த வரும் டி.வி. நடிகருமான கஜேந்திர சவுகான் நியமிக்கப்பட்டார். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த வாரம் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இங்கு வந்து மாணவர்களை சந்தித்துப் பேசினார். பின்னர் மாணவர் பிரதிநிதிகளுடன் ராகுல் காந்தி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து மனு கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating