தகாத வார்த்தைகளால் என் தாய்-தங்கையை மெட்ராசி திட்டினார்: ஷீடேன் பேட்டி
உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்சு அணியின் கேப்டனும், உலகின் சிறந்த வீரர்களில் ஒருவரான ஷீடேன் இத்தாலியின் மெட்டராசியை தலையால் முட்டி கீழே தள்ளி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். ஷீடேன் ஏன் அவ்வாறு நடந்து கொண்டார்? என கோடிக்கணக்கான ரசிகர்கள் புலம்பி தவித்துக்கொண்டிருக்கின்றனர்.
மெட்டராசி, ஷீடேனை தீவிரவாதி எனவும், அவருடைய தாய், தங்கையை மோசமாக திட்டியதாகவும் பல செய்திகள் வெளிவந்தன. எனினும் இதுகுறித்து ஷீடேன் எந்த கருத்தும் கூறாமல் இருந்தார்.
உண்மையில் என்ன நடந்தது என்பது தெரியாத நிலையில் ஷீடேனிடம் விசாரணை நடத்தப்படும் என `பிபா’ அறிவித்துள்ளது. இதனால் சிறந்த வீரர் என அவருக்கு வழங்கப்பட்ட தங்க பந்து பறிக்கப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் பிரான்சு தலைநகர் பாரீசில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷீடேன் பல்லாயிரக்கணக்கானோர் முன்னிலையில் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
நடந்த செயலுக்காக அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அதிலும் முக்கியமாக குழந்தைகள் அதிகமானோர் போட்டியை ரசித்து பார்த்திருப்பார்கள். அவர்களும் என்னை மன்னித்து விடுங்கள்.
இறுதிப் போட்டியில் இத்தாலி வீரர் மெட்டராசி தகாத வார்த்தைகளால் திட்டினார். அவர் எனது தாயையும், தங்கையையும் பற்றி மிகவும் கொடூரமான வார்த்தைகளால் திட்டி தீர்த்தார். இதனாலேயே எனக்கு கோபம் அதிகமானது.
அதன் காரணமாகவே மெட்டராசியை தலையால் முட்டினேன். என் முகத்தில் ஓங்கி ஒரு குத்து குத்தியிருந்தாலும் கூட தாங்கி இருப்பேன். ஆனால் அவர் எனது குடும்பத்தை பழி சொற்களால் வசைபாடி விட்டார். இது எனது தனிப்பட்ட விவகாரம். இதற்கு மேல் எதையும் நான் கூற விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
ஆனால் மெட்டராசி இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த தொடர்பாக வெப்சைட் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள அவர், `ஷீடேனை எந்த ஒரு தகாத வார்த்தைகளாலும் திட்டவில்லை. அதிலும் அவருடைய தாய், தங்கையை பற்றி எதுவுமே சொல்லவில்லை. ஷீடேன் எப்போதும் என்னுடைய ஹீரோ. அவருடைய தாய் உடல்நிலை சரி இல்லாமல் மருத்துவமனையில் இருப்பது கூட எனக்கு தெரியாது. அவர் குணமடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.