குழந்தைகள் முன் பெற்றோர்கள் பேசக் கூடாது விஷயங்கள்…!!
குழந்தைகள் அவர்களது பெற்றோரையும், சமூகத்தையும் பார்த்து தான் வளர்கின்றனர். இந்த இரு முக்கிய புள்ளிகளின் தாக்கம் கண்டிப்பாக குழந்தைகளின் மனதில் ஆழமாக பதிய நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. சமூகத்தில் ஏற்படும் விஷயங்களை நாம் மாற்றியமைக்க முடியாது. ஆனால், வீட்டில் பெற்றோர்கள் செய்யும் தவறை மாற்றிக் கொள்ளலாம்.
ஆம், குழந்தைகள் முன்பு பெற்றோர்கள் பேசக் கூடாத விஷயங்கள் நிறைய இருக்கின்றன. பொருளாதாரம், வன்முறை, சண்டை, ஜாதி மத கருத்து, உடலுறவு, கவர்ச்சி என சிலவற்றை வளரும் குழந்தைகள் முன்பு பெற்றோர்கள் பேசக் கூடாது. இது குழந்தைகளின் மனதில் எதிர்மறை எண்ணங்கள் வளர்வதற்கு தோதாக அமைந்துவிடும்….
பொருளாதாரம்
எக்காரணம் கொண்டும் உங்கள் குழந்தைகளின் முன்பு பொருளாதாரம் பற்றி பேச வேண்டாம். பருவ வயது தாண்டிய பிறகு கட்டாயம் வீட்டின் பொருளாதாரம் பற்றி குழந்தைகளுக்கு தெரிய வேண்டும். ஆனால், சிறு வயதிலே, பள்ளி பருவத்தில் பொருளாதாரம் பற்றி பேசுவது அவர்களுடைய கவனத்தை சிதறடிக்க வாய்ப்புகள் இருக்கின்றன.
வன்முறை கருத்துக்கள்
சிறுவயது குழந்தைகள் முன்பு, வன்முறை நிகழ்வுகள், கருத்துக்கள் பற்றி பேசுவது அவர்களது நெஞ்சில் மாற்றத்தை கொண்டுவரவோ, பயத்தை உண்டாக்கவோ காரணியாக அமைந்துவிடும்.
ஜாதி, மத கருத்து
சிறு வயது மட்டுமல்ல, எந்த வயதிலும் உங்கள் குழந்தையின் முன் ஜாதி மதம் பற்றியும், ஏற்ற, தாழ்வு பற்றியும் பேச வேண்டாம். எதிர்கால சந்ததியாவது ஜாதி மத பேதமின்றி வளரட்டுமே.
உடலுறவு
உடலுறவு குறித்த விஷயங்களை குழந்தைகள் முன்பு பேச வேண்டாம். முக்கியமாக கவர்ச்சியை தூண்டும் வகையில் பேச வேண்டாம். சிறு குழந்தைக்கு என்ன தெரிய போகிறது என்று நினைக்க வேண்டாம். இன்றைய குழந்தைகள் தொழில்நுட்பத்தையே கரைத்துக் குடித்து விடுகின்றனர்.
தகாத வார்த்தைகள்
நிறைய பெற்றோர்கள் செய்யும் தவறு இது தான். வீட்டில் குழந்தையை வைத்துக் கொண்டு அவர்கள் முன்னிலையில் தகாத வார்த்தைகளை பயன்படுத்துவது. இது குழந்தைகள் மனதில் எளிதாக பதிந்து விடும்.
உறவினர்கள், நண்பர்களை புறம் பேசுதல்
உறவினர்கள் மற்றும் உங்கள் நண்பர்கள் வீட்டிற்கு வந்து சென்ற பிறகு அவர்களை பற்றி தவறாக பேசுதல். முகத்திற்கு முன்பு நகைத்தும், சென்ற பிறகு பகைத்தும் பெற்றோர்கள் பேசுவதே தவறான செயல் தான். இதை, குழந்தைகளுக்கும் பழக்கிவிட வேண்டாம்.
Average Rating