கொலை வழக்கில் கைதான பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: சப்–இன்ஸ்பெக்டர்– 2 போலீசார் கைது…!!
திருப்பூர் மாவட்டம் உடுமலை நாராயணவீதியை சேர்ந்தவர் லீலாவதி. இவர் கடந்த 2014–ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9–ந் தேதி கொலை செய்யப்பட்டு வீட்டில் பிணமாக கிடந்தார். இதுப்பற்றி தெரியவந்ததும் உடுமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக லீலாவதியின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்த மதுரையை சேர்ந்த சந்திரா (45) என்ற பெண்ணை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சந்திராவை பார்க்க அவரது மகள் ராஜகுமாரி என்பவர் சிறைக்கு சென்றார். அப்போது அவரிடம், சந்திரா தன்னை போலீசார் விசாரணையின் போது மானபங்கம் செய்து பாலியல் சித்ரவதை செய்ததாக தெரிவித்து உள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ராஜகுமாரி உடுமலை போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி, இது தொடர்பாக மருத்துவ பரிசோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்ய கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு உத்தரவிட்டார்.
அதன்படி சந்திராவுக்கு மருத்துவ பரிசோதனை செய்து அதன் அறிக்கை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. அவர்கள் கடந்த ஆண்டு அக்டோபர் 17–ந் தேதி விசாரணையை தொடங்கினர். இந்த வழக்கு தொடர்பாக அவர்கள் பல்வேறு கட்ட விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் சம்பவத்தின்போது உடுமலை போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போலீஸ்காரர்கள் விஜயகுமார், திலக், ரங்க நாயகம் ஆகிய 3 பேருக்கு சம்மன் அனுப்பபட்டது. அவர்கள் சி.பி.ஐ.யிடம் ஆஜர் ஆனார்கள். அப்போது அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட விஜய குமார் தற்போது தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் போலீஸ் நிலையத்தில் சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். திலக், ரங்கநாயகம் ஆகியோர் உடுமலை போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருகிறார்கள்.
திருப்பூர் மாவட்டத்தில் பணியாற்றும் சப்–இன்ஸ்பெக்டர், 2 போலீசார் சி.பி.ஐ.போலீசாரால் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating