கோவையில் அதிகாரி திட்டியதால் போலீஸ்காரர் தற்கொலை முயற்சி…!!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தக்கரை சிங்காரத்தோட்டத்தை சேர்ந்தவர் அப்துல்சலாம் (வயது 20). இவர் கோவைப்புதூரில் உள்ள சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராக வேலை செய்து வருகிறார்.
நேற்று அப்துல் சலாம் பட்டாலியனில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாக தெரிகிறது.
இதைப்பார்த்த உயர் அதிகாரி ஒருவர் அப்துல் சலாமை திட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அப்துல்சலாம் தனது அறைக்கு சென்று கையை பிளேடால் அறுத்தார். வலியால் அலறித்துடித்த அவரது சத்தம் கேட்டு சகபோலீசார் அங்கு விரைந்தனர். பின்னர் ரத்தவெள்ளத்தில் கிடந்த அப்துல்சலாமை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பபட்டது. தகவல் அறிந்ததும் குனியமுத்தூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கடந்த வாரம் இதே கோவைப்புதூர் பட்டாலியன் பிரிவில் 2 போலீஸ்காரர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
இது தொடர்பாக பட்டாலியன் பிரிவு உயர் அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை நடத்திச்சென்றனர். இந்த நிலையில் அதிகாரி ஒருவர் திட்டியதால் போலீஸ்காரர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Average Rating