மதுவுக்கு எதிரான போராட்டம் தொடரும்; நடிகை ரோஜா பேட்டி
மதுவுக்கு எதிரான எனது போராட்டம் தொடரும் என்று நடிகை ரோஜா கூறினார். பிரபல தமிழ் நடிகையும், ஆந்திராவில் சந்திரபாபுநாயுடு தலைமையிலான தெலுங்கு தேச கட்சியின் மாநில மகளிர் அணி செயலாளருமான ரோஜா தனது பிறந்த நாளையொட்டி நேற்று திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருடன் சினிமா டைரக்டரும், நடிகை ரோஜாவின் கணவருமான ஆர்.கே.செல்வமணி மற்றும் அவர்களுடைய 2 குழந்தைகளும் வந்திருந்தனர். நடிகை ரோஜாவும், அவருடைய குடும்பத்தினரும் ஏழுமலையான் கோவிலுக்கு சென்று அங்கு வரிசையில் நின்று பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலை விட்டு வெளியே வந்த நடிகை ரோஜாவை பத்திரிகை நிருபர்கள் சூழ்ந்து கொண்டு கேள்வி கேட்டனர். அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து நடிகை ரோஜா கூறியதாவது:- நான் சினிமாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று 4 மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்து பிரபலமாக இருந்தேன். எனக்கு தமிழிலும், தெலுங்கிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இன்னும் கூட என் மீது என் ரசிகர்கள் அபரிமிதமான அன்பு செலுத்தி வருகிறார்கள். அவர்களின் அன்புக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன். சினிமா துறையில் இருந்து நான் அரசியலுக்கு வர காரணம் தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுதான்.
மது ஒழிப்பு போராட்டம்
ஆந்திர மாநிலத்தில் மதுவால் தான் நிறைய குடும்பங்கள் கஷ்டமான நிலையில் உள்ளன. எனவே ஆந்திர மாநிலம் முழுவதும் மது விலக்கு கொண்டு வர வேண்டும் என்று நான் போராடி வருகிறேன். இந்த போராட்டத்துக்கு மாநிலம் முழுவதும் பெண்கள் உள்பட ஆண்களும் நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள். எங்கள் கட்சி சார்பில் நடத்தப்படும் இந்த போராட்டம் தொடரும்.
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மகள் தனது காதலுடன் சென்று பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டதால் சிரஞ்சீவியின் மனம் எந்த அளவுக்கு வேதனை அடைந்திருக்கும் என்பதை என்னால் உணர முடிகிறது. இருந்தாலும் இதற்கு மேல் அந்த பிரச்சினை குறித்து நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. இவ்வாறு நடிகை ரோஜா கூறினார்.