பொறாமைப்பட்ட பெண்ணுக்கு ஓராண்டு சிறை தண்டனை
தனது பழைய ஆண் நண்பர்கள், திருமணம் செய்து மனைவிகளுடன் மகிழ்ச்சியாக இருப்பதால் பொறாமை அடைந்த பெண், அவர்களுக்கு காமம் ததும்பும் காதல் ரசத்துடன் தொடர்ந்து கடிதம் அனுப்பி வந்தார். அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. துரே என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் குல்விந்தர் கவுர். இவரது பழைய ஆண் நண்பர்கள், ஹர்பிரீத், பிங்கி. இவர்களும் அதே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். திருமணமாகி மனைவியுடன் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்தனர்.தனக்கு ஏற்ற கணவர் கிடைக்காததால், ஹர்பிரீத், பிங்கிக்கு காமம் சொட்டச் சொட்ட காதல் கடிதங் களை அனுப்பி வந்தார். இந்த கடிதங்களால், ஹர்பிரீத், பிங்கி குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டது. கணவன் மீது மனைவிக்கு சந்தேகம் வந்ததால், மகிழ்ச்சி குலைந்தது. ஆனால், கடிதங்கள் தொடர்ந்து வந்தன. ஏற்கனவே தொடர்பு இருப்பது போலவும், மீண்டும் அதை தொடர்வதற்கு அழைப்பதைப் போலவும், வேறு பெண் பெயரில் கடிதங்கள் எழுதி வந்தார் குல்விந்தர்.தற்செயலாக ஹர்பிரீத், பிங்கி இருவரும் தங்கள் குடும்பப் பிரச்னை குறித்து பேசிய போது, இருவரும் ஒரே மாதிரியாக பாதிக்கப்பட்டு இருப்பதை அறிந்தனர்.
தங்களுக்கு வந்த கடிதத்தை ஒப்பிட்டு பார்த்த போது, அது ஒரே நபரால் எழுதப்பட்டது உறுதியானது. ஏற்கனவே, ஹர்பிரீத்திடம், குல்விந்தர் கையெழுத்துடன் கொண்ட நோட்டுப்புத்தகம் இருந்தது. அதனுடன் ஒப்பிட்ட போது, கடிதங்களை அனுப்பியது குல்விந்தர் தான் என்பது உறுதி செய்யப்பட்டது.கிராமத்தில் பஞ்சாயத்து கூட்டப்பட்டது. பஞ்சாயத்தில், அந்த கடிதங்களை அனுப்பியதை குல்விந்தர் ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்திய குற்றவியல் தண்டனை சட்டம் 509வது பிரிவின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.வழக்கு விசாரணையின் போது, தனக்கு கணவர் கிடைக்காததால், ஏமாற்றமடைந்த நிலையில், இந்த கடிதங்களை எழுதியதாக குல்விந்தர் தரப்பில் வாதாடப்பட்டது. ஆனால், இதை ஏற்க மறுத்த நீதிபதி, திருமண வாழ்க்கையில் குழப்பம் ஏற்படுத்த முயற்சித்ததால், குல்விந்தருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.