ஆசியாவிலேயே அதிக வரி செலுத்துவது இந்தியர்கள்தான்!
வருமான வரியாகவும் பிற சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்குமாக அரசுக்கு அதிகமாக பணம் செலுத்துவதில் ஆசியாவில் இந்தியர்கள்தான் முதலிடம் பிடித்துள்ளனர். மெர்செர் என்ற மனிதவள மேம்பாட்டு நிறுவனம் நடத்திய ஆய்வு இதைத் தெரிவிக்கிறது. வருமான வரி முறை, தொழில் வரி, சராசரி சம்பளம், திருமண நிலை ஆகியவற்றின் அடிப்படையில் மொத்தம் 32 நாடுகளில் இந்த நிறுவனம் ஆய்வு நடத்தி முடிவுகளை வெளியிட்டு உள்ளது. இதன்படி, இந்தியர்களின் மொத்த சம்பளத்தில் 29.1 சதவீதம் வரை வரிக்கு பிடித்தம் செய்யப்படுகிறது. அதில் வருமான வரி, தொழில் வரி, சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்கான பங்களிப்பு. உள்ளிட்ட பல அம்சங்கள் அடக்கம். அதாவது ரூ.30 ஆயிரம் சம்பளம் என்றால், வரிகள் எல்லாம் போக ரூ.21 ஆயிரத்து 730தான் வீட்டுக்கு எடுத்துச் செல்கிறார்களாம் இந்திய ஊழியர்கள். ஆனால் ஐக்கிய அரபு எமிரேட்சில் நிலையே வேறு. அங்கு ஊழியர்களின் மொத்த சம்பளத்தில் 5 சதவீதம் மட்டும்தான் அரசுக்கு வரியாக செல்கிறது. மீதி அனைத்தும் ஊழியர்களுக்குத்தான். அந்நாட்டில் வருமான வரி கிடையாது. 5 சதவீத பிடித்தமும் சமூக பாதுகாப்பு திட்டங்களுக்குத்தான் செல்கிறது. பெல்ஜியம், டென்மார்க், ஹங்கேரி நாடுகளில் ஊழியர்களின் சம்பளத்தில் மிக மிக குறைவான அளவுதான் பிடித்தம் செய்யப்படுகிறதாம். பிரேசில், இந்தியா, துருக்கி நாடுகளில் திருமணமான ஊழியர்கள், திருமணமாகாதவர்கள் என்ற பாகுபாடு இல்லை. ஆனால் சில நாடுகளில் நிலை வேறு மாதிரி. அங்கு திருமணமானவர்களுக்கு வரி குறைவாகவும் திருமணம் ஆகாதவர்களுக்கு அதிகமாகவும் வசூலிக்கப்படுகிறது. அதுவும் குழந்தை இருந்தால் இன்னும் சலுகை அதிகம்.