காதலியை பதிவு திருமணம் செய்து வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற எம்.பி.ஏ. பட்டதாரி வாலிபர்…!!
சங்கராபுரம் அருகே ரங்கப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகள் மீனா (வயது 28). ஆசிரியர் பட்டயபயிற்சி முடித்த இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 6 ஆண்டுகளாக ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரி வாலிபரான பச்சையப்பன் (28) என்பவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு பச்சையப்பன் சென்னையில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது மீனா போனில் பச்சையப்பனிடம் தொடர்பு கொண்டு தன்னை முறைப்படி திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியபோது இருவருக்கும் அரசு வேலை கிடைத்த உடன் முறைப்படி திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி பச்சையப்பன் காலம் கடத்தி வந்தார்.
இதற்கிடையே பச்சையப்பன் தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணையே திருமணம் செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்து வந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த மீனா இதுபற்றி பச்சையப்பனிடம் கேட்டார் தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். ஆனால் பச்சையப்பன் திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டார். இதுபற்றி பச்சையப்பனின் பெற்றோரிடம் மீனா முறையிட்ட போது அவர்களும் மகனுக்கு ஆதரவாக பேசினர்.
இதையடுத்து மீனா இதுகுறித்து கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் பச்சையப்பன் மற்றும் அவரது பெற்றோரை அழைத்து விசாரணை நடத்தினர். பின்னர் மீனாவிடமும், பச்சையப்பனிடமும் தனித்தனியே கவுன்சிலிங் நடத்தினர். நேற்று காலை முதல் இரவு வரை இந்த கவுன்சிலிங் நடைபெற்றது.
இதில் பச்சையப்பன் மனம் மாறினார். மீனாவை திருமணம் செய்து கொள்வதாக ஒத்துக்கொண்டார். பின்னர் போலீசாரின் முன்னிலையில் கள்ளக்குறிச்சி தாசில்தார் அலுவலகம் அருகே உள்ள பிள்ளையார் கோவிலில் நேற்று இரவு 10 மணிக்கு மீனா கழுத்தில் பச்சையப்பன் தாலிகட்டி மனைவியாக ஏற்றுக்கொண்டார். மணமக்களுக்கு அட்சதை தூவி போலீசார் வாழ்த்தினர்.
Average Rating