மர்மமான முறையில் பலியான மருமகள், மற்றும் 3 பேரன்கள்: முன்னாள் எம்.பி குடும்பத்துடன் கைது…!!
தெலுங்கானாவில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி-யின் மருமகள், மற்றும் 3 பேரன்கள் மர்மமான முறையில் பலியானதையடுத்து, முன்னாள் எம்.பி, அவரது மனைவி, மகனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
வாரங்கல் மக்களவைத் தொகுதிக்கு விரைவில் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த முன்னாள் எம்.பி. சிரிசில்லா ராஜய்யா நேற்று வேட்பு மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், இவரது வீட்டின் மேல் மாடியில் வசித்து வந்த இவரது மருமகள் சாரிகா மற்றும் 3 பேரன்கள் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் நடந்தபோது, சாரிகாவின் கணவர் அனில் வீட்டில் இல்லை என கூறப்படுகிறது.
சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார், முன்னாள் எம்.பி ராஜய்யா, அனில் மற்றும் பணியாளர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு சென்று, திறந்த நிலையில் காணப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் ரெகுலேட்டரில் இருந்த கைரேகையை பதிவு செய்துள்ளனர்.
பின்னர், 4 உடல்களும் மீட்கப்பட்டு வாரங்கல் எம்.ஜி.எம். அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சாரிகாவின் பெற்றோர் குடும்ப பிரச்சினையால்தான் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக பொலிசில் புகாரளித்ததால் ராஜய்யா, அவரது மனைவி மாதவி, மகன் அனில் ஆகியோரை கைது செய்துள்ளனர்.
இதனிடையே, ராஜய்யாவின் மகன் அனில்குமார் ரகசியமாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் அந்த விடயம் மனைவிக்கு தெரியவந்ததையடுத்து இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவத்தை தொடர்ந்து காங்கிரஸ் மேலிடம் சிரிசில்லா ராஜய்யாவை இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளது.
மேலும், ராஜய்யாவுக்கு பதிலாக சத்யநாராயணா என்பவர் மனுதாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று காங்கிரஸ் வேட்பாளராக மனுத்தாக்கல் செய்துள்ளார்.
Average Rating