சென்னையில் கொட்டி தீர்த்த மழை: பனையூரில் சுவர் இடிந்து 2 வயது பெண் குழந்தை பலி..!!
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
சென்னை நீலாங்கரையை அடுத்துள்ள பனையூர் வேலு நாயக்கன் தெருவில் வசித்து வருபவர் விஜயகுமார் பெட்ரோல் பங்க் ஊழியரான இவர் மனைவி மற்றும் 2 வயது பெண் குழந்தை பவித்ராவுடன் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
இன்று அதிகாலை 4.30 மணி அளவில் மழை காரணமாக இவர்களது வீட்டு அருகில் உள்ள காம்பவுண்டு சுவர் இடிந்து வீடு மீது விழுந்தது.
வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த பவித்ரா இடி பாடுகளுக்குள் சிக்கினார். இதனால் அலறியடித்துக் கொண்டு எழுந்த விஜயகுமாரும், அவரது மனைவியும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களின் உதவியுடன் இடிபாடுகளை அகற்றி பவித்ராவை மீட்டனர்.
ஆனால் சுவர் இடிந்து விழுந்ததில் பலத்த காயம் அடைந்த பவித்ரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாள். மேலும் விஜயகுமாரின் தந்தை பாவாடை (70), தாய் சரசு (60) ஆகியோரும் படுகாயம் அடைந்தனர்.
தகவல் கிடைத்ததும் கானாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் விரைந்து சென்று குழந்தை பவித்ராவின் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் காம்பவுண்டு சுவரின் தரம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை சேத்துப்பட்டு அப்பாசாமி தெருவில் வசித்து வருபவர் லில்லி (64) இவர் நேற்று மாலை வீட்டில் இருந்த போது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்த பீரோ சாய்ந்ததில் லில்லி பலத்த காயம் அடைந்தார்.
பின்னர் அவர் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சுவர் இடிந்து விழுந்த போது, லில்லியின் மகள் வீட்டுக்கு வெளியில் நின்று கொண்டிருந்ததால் காயம் இன்றி தப்பினார்.
Average Rating