போலீஸ்காரர் மனைவி மீது ஆசிட் வீச்சு: பெண் போலீஸ் கைது..!!
தஞ்சை ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் பைரவன் (வயது 32). இவரது மனைவி தமிழ்ச்செல்வி (24). இவர்கள் தஞ்சை ராமநாதன் ரவுண்டானா அருகே உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று தமிழ்ச்செல்வி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது ஒரு பெண் அங்கு வந்தார். ஆர்க்கெஸ்ட்ரா நிகழ்ச்சி குறித்து பைரவனிடம் பேச வேண்டும் என்றார். அவர் வீட்டில் இல்லை. வெளியில் சென்றுள்ளார் என்று தமிழ்ச்செல்வி பதிலளித்தார்.
உடனடியாக அந்த பெண் தமிழ்ச்செல்வியின் கழுத்தில் பெல்டால் இறுக்கினார். அப்போது மற்றொரு கையில் வைத்திருந்த ஆசிட் பாட்டிலை எடுத்து தமிழ்ச்செல்வி முகத்தில் ஊற்ற முயன்றார். இதை தமிழ்ச்செல்வி தடுத்தார். இருப்பினும் அவரது வாய் மற்றும் கழுத்தில் ஆசிட் துளிகள் பட்டு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.
இதையடுத்து தமிழ்ச்செல்வி தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். தகவலறிந்த தஞ்சை தெற்கு போலீசார் ஆசிட் ஊற்றிய பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினார்கள். இதில் அந்த பெண்ணின் பெயர் திவ்யா (26) என்பதும், அவர் திருச்சி ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. பைரவன் ஏற்கனவே 2010 முதல் 2014 வரை திருச்சி ஆயுதப்படையில் பணியாற்றியபோது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பைரவன் தஞ்சை ஆயுதப்படைக்கு மாற்றலாகி வந்தும் தொலைபேசியில் திவ்யா அடிக்கடி பேசி வந்தார். ஒருமுறை திவ்யா தொலைபேசியில் பேசும்போது அந்த தொலைபேசியை தமிழ்ச்செல்வி பிடுங்கி அவரை திட்டினாராம். இதையடுத்து கடந்த சில நாட்களாக பைரவனும் தொலைபேசியில் பேசவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த திவ்யா ஆசிட் பாட்டிலுடன் தஞ்சை வந்து தமிழ்ச்செல்வி மீது ஊற்றி அவரை கொலை செய்ய முயன்ற விபரம் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் திவ்யாவை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் துணை கமிஷனர் சசிமோகன், பெண் போலீஸ் திவ்யாவை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார்
Average Rating