21 இலங்கையர்கள் அமெரிக்கப் படையால் ஈராக்கில் கைது
ஈராக்கிலுள்ள அமெரிக்கப் படைத்தளமொன்றில் கடமையாற்றி வந்த 21 இலங்கையரை அமெரிக்க படையினர் கைது செய்துள்ளனர். பக்தாத் நகரில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்பின் போது, சம்பவம் இடம்பெற்ற வீதியில் நின்று கொண்டிருந்த ட்ரக் வண்டியில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ட்ரக்கில் மொத்தம் 31 பேர் இருந்தனர். அவர்களில் 21 பேர் இலங்கையர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அமெரிக்கப் படையினருக்கு உணவு, நீர் போன்றவற்றை விநியோகம் செய்துவரும் கம்பனியொன்றில் கடமையாற்றுபவர்கள் என ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. ஈராக்கில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையர்கள் பற்றி லெபனானுக்கான இலங்கைத் தூதுவராலயத்திடமிருந்து பூரண அறிக்கையொன்றை கோரியுள்ளதாக இலங்கை வெளி விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த அறிக்கை கிடைத்ததன் பின்னர் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.