பாகிஸ்தானில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டது: 13 பேர் பலி…!!
பாகிஸ்தானில் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்தனர். 100 பேர் படுகாயம் அடைந்தனர்.
பாகிஸ்தானின் பதற்றமான மாகாணங்களில் ஒன்று பலூசிஸ்தான். இந்த மாகாணத்தின் தலைநகர் குயிட்டா-ராவல்பிண்டிக்கு இடையே ஜாபர் எக்ஸ்பிரஸ் எனும் ரெயில் இயக்கப்படுகிறது.
இந்த ரெயில் இன்று போலன் மாவட்டத்துக்கு அருகே சென்று கொண்டிருந்த போது ரெயிலின் 4 பெட்டிகள் திடீரென தடம் புரண்டன. இந்த விபத்தில் ரெயில் ஓட்டுநர் மற்றும் துணை ஓட்டுநர் உள்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 100 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் கிடைத்ததும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
படுகாயம் அடைந்த அனைவரையும் மீட்டு குவெட்டா நகரில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அங்குள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் அவரசகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 1-ந்தேதி அன்று குவெட்டா நகரின் புறநகர் பகுதியில் ஜாபர் எக்ஸ்பிரஸ் சென்றுகொண்டிருந்தபோது ரெயில் தண்டவாளத்துக்கே அருகே குண்டு வெடித்ததில் ரெயில்வே ஊழியர்கள் 4 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
ரெயிலில் பிரேக் பிடிக்காத காரணத்தினால் தடம் புரண்டது என்று முதல்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது என்று டான் இணையதளம் செய்தி வெளியிட்டு உள்ளது.
Average Rating