பாலக்காடு அருகே லாரி மோதி கணவன்–மனைவி பலி..!!
கேரள மாநிலம் பாலக்காடு அருகேயுள்ள மேலூர் பாலக்கடவு பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது 60). இவரது மனைவி ரூபி (55). இவர்கள் நேற்று மாலை 4 மணி அளவில் பாலக்காடு நகரசபை கட்டிடம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மின்னல் வேகத்தில் லாரி வந்தது.
கண் இமைக்கும் நேரத்தில் அந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் கணவனும், மனைவியும் நடுரோட்டில் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். விபத்து நடந்ததும் டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு ஓடிவிட்டார்.
அந்த வழியாக சென்றவர்கள் இருவரையும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லாமல் வேடிக்கை பார்த்தனர். மேலும் தங்கள் செல்போனில் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஒருவர் பாலக்காடு தெற்கு போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
இன்ஸ்பெக்டர் நவுசாத் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இருவரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே கணவனும், மனைவியும் பரிதாபமாக இறந்தனர்.
விபத்து நடந்ததும் இருவரையும் ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தால் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு உள்ளது. அதை விட்டு விட்டு செல்போனில் படம் எடுத்திருக்கிறார்கள் என்று போலீசார் தங்கள் வேதனையை தெரிவித்தனர்.
Average Rating