வேப்பேரியில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி…!!
சென்னை சூளை சி.கே.பி. கோவில் தெருவில் வசித்து வந்தவர் வசந்தகுமார் (34). திருமணமான இவருக்கு 2 குழந்தைகள் உள்ளன.
2–வது குழந்தை கோகுல கிருஷண்னுக்கு 1½ வயது ஆகிறது. இந்த குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மனைவி புவனா மற்றும் குழந்தையுடன் வசந்தகுமார் ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
வேப்பேரி நெடுஞ்சாலை மேத்தா தெருவில் உள்ள ஆஸ்பத்திரியில் குழந்தையின் உடல்நிலையை பரிசோதித்த வசந்தகுமார், மனைவியையும், குழந்தையும் அங்கேயே அமர வைத்து விட்டு எதிரில் உள்ள மருந்து கடைக்கு மருந்து வாங்குவதற்கு சென்றார்.
அப்போது சாலையில் அறுந்து கிடந்த மின் கம்பியில் அவர் மிதித்து விட்டார். இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே வசந்தகுமார் துடிதுடித்து பலியானார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் பெரியமேடு போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கணவரின் உடலை பார்த்து மனைவி புவனா கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
Average Rating