சிறுமி பலாத்கார வழக்கு: சலூன் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை..!!
சிவகாசி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சலூன் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிவகாசி மேற்கு, ரிசர்வ் லயன், நேருஜி நகரில் குடியிருந்து வரும் கயல்நிஷா (44), வெள்ளையாபுரத்தில் உள்ள அட்டை மில்லில் வேலை செய்து வருகிறார்.
கயல்நிஷாவின் கணவர் மைதீன் மனைவியைப் பிரிந்து நெல்லையில் வேலை செய்து வருகிறார்.
இந்த தம்பதியரின் 14 வயது மகள் உடல் நலக் குறைவு காரணமாக வீட்டில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் ராமர் (48) என்ற முடிதிருத்தம் செய்யும் கடை வைத்துள்ள நபர், கடந்த 2012ம் ஆண்டு, தன் வீட்டிற்கு தொலைக்காட்சி பார்க்க வந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதையடுத்து, இதுகுறித்து சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலைய பொலிஸார் வழக்குப் பதிவு செய்து, ராமரைக் கைது செய்து மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி என்.ராஜலட்சுமி, ராமருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ. 30,000 அபராத தொகை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
அபராதத் தொகை ரூ.30 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மேல்முறையீடு காலத்திற்குப் பின்னரோ அல்லது மேல்முறையீடு முடிவடைந்த பின்னரோ தகுந்த ஆவணங்களின் நஷ்டஈடாக அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Average Rating