பாதையில் ஏறுவதில் ஏற்பட்ட தகராறினால் இளைஞரை சுட்டுக் கொன்ற ஊர்காவல்படை வீரர்
கிண்ணியாத் துறையின் வெள்ளைமணல் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த ஊர்காவல் படைவீரரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் இடம்பெற்றது. பிரிமா மா ஆலையின் பணியாளராகப் பணியாற்றும் நிசாம்தீன் நிபார் (22 வயது) என்பவரே பலியானவராவார். இவர் கிண்ணியா, அண்ணல்நகர் கிராமத்தைச் சேர்ந்தவர். சம்பவ தினத்தன்று பிரிமா ஆலையில் வேலை முடிந்து வீடு திரும்பும்போது துறையில் மிதவைப் பாதைக்காக இவர் காத்திருந்தார். பாதை வந்து சேர்ந்ததும் காத்திருந்த நூற்றுக் கணக்கானோர் போன்று இவரும் முண்டியடித்துக் கொண்டு ஏறியுள்ளார். அவ்வேளையில், குறித்த ஊர்காவல் படைவீரர் இவருடன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அதன் உச்சக் கட்டமாகவே துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளதாகவும் தெரிய வருகிறது. சூடுபட்ட இளைஞர் ஆபத்தான நிலையில் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும், அங்கு அவர் உயிரிழந்தார். சுட்டதாகக் கூறப்படும் அப்துல் லெத்தீப் பைரூன் (25 வயது) என்ற ஊர்காவல் படைவீரரை சீனக்குடா பொலிஸார் கைது செய்துள்ளனர்.