காதலனுக்கு அசிட் வீசிய காதலி: பொலிஸாரினால் கைதாகி பிணையில் விடுதலை
காதலனின் முகத்தில் அசிட் வீசி காயப்படுத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்ட காதலியைக் குருவிட்ட பொலிஸார் இரத்தினபுரி நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது நீதிபதி ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் 5 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் விடுதலை செய்துள்ளார். உதய பிரியங்கர தேசாந்த என்பவரே அசிட் வீச்சுக்கு உள்ளாகியுள்ளார். காதலியான எம்.சி. சாந்தினியே கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டவராவார். இச்சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது, காதலன் ஏற்கனவே திருமணம் முடித்தவரென்றும், இவருக்கு ஏற்கனவே இரு பிள்ளைகள் உள்ளனரென்றும் அறிந்த காதலி இவருடனான தொடர்பை துண்டித்துள்ளார். இதன் பின்னரே அசிட் வீச்சு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதேவேளை தனக்கு அவ்வப்போது தொலைபேசியில் தொல்லை கொடுத்து வந்ததாகவும், சம்பவம் நிகழ்ந்த தினத்தன்று மாலை 6 மணிக்கு தனது வீட்டுக்கு வந்து தனது தாயையும் தன்னையும் தாக்க முற்பட்டார். இதனாலேயே நான் அசிட்டை எடுத்து வீசினேன் என்று கைது செய்யப்பட்ட காதலி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் குருவிற்ற பொலிஸார் அப்பெண்ணின் வீட்டிலிருந்து அசிட் போத்தல்கள் இரண்டையும் வெற்றுப் போத்தல்கள் இரண்டையும் கைப்பற்றியுள்ளனர்.