காதலியை சுட்டுக்கொன்றமை தொடர்பில் ஒஸ்கார் பிஸ்டோரியஸ் கொலைக் குற்றவாளி! தென் ஆபிரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு…!!
தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த பராலிம்பிக் முன்னாள் சம்பியனான ஒஸ்கார் பிடோரியஸ், தனது காதலியை சுட்டுக்கொன்ற விவகாரத்தில் கொலைக் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2013 பெப்ரவரி 14 ஆம் திகதி காதலர் தினத்தன்று அதிகாலை தனது வீட்டில் வைத்து தனது காதலி ரீவா ஸ்டீன்கெம்ப் மீது ஒஸ்கார் பிஸ்டோரியஸ் துப்பாக்கிப் பிரயோகம் செய்திருந்தார்.
வாக்குவாதம் ஒன்றையடுத்து கழிவறையில் ஒளிந்திருந்த ரீவாவை ஒஸ்கார் பிஸ்டோரியஸ் சுட்டுக்கொன்றதாக பொலிஸார் குற்றம் சுமத்தினர்.
ஆனால், அதிகாலையில் கழிவறைக்குள் சத்தம் கேட்டு தான் விழித்தெழுந்து பார்த்தபோது திருடன் புகுந்துவிட்டதாக எண்ணியதாகவும், அதனால் கழிவறை கதவுக்கூடாக துப்பாக்கிப்பிரயோகம் செய்தாகவும், சிறுபருவத்திலேயே இரு கால்களையும் இழந்தவரானஒஸ்கார் பிஸ்டோரியஸ் கூறினார்.
தனக்கு அருகில் உறங்கிக் கொண்டிருந்த காதலி ரீவா கட்டிலில் இல்லை என உணர்ந்தபோதே, ரீவாவே கழிவறையில் இருந்தார் என்பதை தான் உணர்ந்து கொண்டதாகவும் அதன்பின் கதவை உடைத்து அவரை காப்பாற்ற முயற்சித்தபோதிலும் பலனளிக்கவில்லை எனவும் ஒஸ்கார் பிஸ்டோரியஸ் கூறினார்.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வேண்டுமென்றே கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டிலிருந்து ஒஸ்கார் பிஸ்டோரியஸை விடுவித்தது. ஆனால், கைமோசக் கொலைக் குற்றச்சாட்டில் அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு 2014 ஒக்டோபர் மாதம் 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சுமார் ஒரு வருட சிறைவாசத்தின்பின் கடந்த ஒக்டோபர் 19 ஆம் திகதி அவர் வீட்டுக்காவலுக்கும் மாற்றப்பட்டார்.
அதேவேளை, ஒஸ்கார் பிஸ்டோரியஸுக்கு எதிரான மேன்முறையீட்டு வழக்கு தென் ஆபிரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஒஸ்கார் பிஸ்டோரியஸ் கொலைக் குற்றவாளி என அந்நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. தான் பாதுகாப்புக்காகவே துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக பிஸ்டோரியஸ் கூறியதை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது.
Average Rating