இலங்கையில் 191 பேரை பலி கொண்ட விமான விபத்து : இன்றுடன் 41 வருடங்கள் பூர்த்தி…!!
இலங்கையில் இடம்பெற்ற பாரிய விமான விபத்து சம்பவமொன்று நடந்து இன்றுடன் சரியாக 41 வருடங்கள் பூர்த்தியாகின்றன.
1974ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் திகதி இந்தோனேஷியா சுராபயாவிலிருந்து 182 ஹஜ் பயணிகள் மற்றும் 9 ஊழியர்கள் சகிதம் மக்கா நோக்கி பயணித்த மார்டின் எயார் பிளைட் 138 பயணிகள் “சப்த கன்னிய” என அறியப்படும் ஏழுகன்னியர் மலையில் ஐந்தாவது குன்றின் மீது மோதிச் சிதறியது. இச்சம்பவத்தில் விமானிகள் உட்பட 191 பேரும் அதே இடத்தில் பலியாகினர்.
இலங்கையில் அதுவரையிலான மிக மோசமான விபத்தாக இச்சம்பவம் அமைந்தது. மலையகத்திற்கு இது அதிர்ச்சியளித்த ஒரு புது அனுபவம். 191 பேர் பலியான இவ்விபத்து இடம்பெற்ற மலைப்பகுதியை ஏழு கன்னியர் மலை (ஆங்கிலத்தில் வில்கின் ஹில்ஸ்) என்று அழைக்கின்றனர்.
இவ்விபத்தில் பலியான 190 பேர் தெப்பட்டன் தோட்ட கொத்தலென பகுதியில் அவ்விடத்திலேயே புதைக்கப்பட்டனர்.
அடையாளம் காணக்கூடியவாறு இருந்த விமானப் பணிப்பெண் ஒருவரின் உடலை அவரின் காதலர் ஹெலிகொப்டர் மூலமாக கொண்டு சென்ற நெகிழ்ச்சியான சம்பவமும் இதில் அடங்கும்.
விபத்துக்குள்ளான மெக்டொனல்ட் டக்ளஸ் டி.சி. 8 ரக விமானத்தின் பாகங்களில் எஞ்சியிருக்கும் டயர்கள் இரண்டு மட்டும் இதுவரை பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
ஒரு டயர், நோட்டன் பொலிஸ் நிலையத்தில் உள்ளது. நல்லநிலையிலிருக்கும் டயர் நோட்டன் விமலசுரேந்திதர அணைக்கட்டுக்கு செல்லும் வழியில் சம்பவங்களை சுருக்கமாக தாங்கி, பார்வைக்காக காட்சியப்படுத்தப்பட்டுள்ளது.
விபத்து நடைபெற்ற இடத்தில் வெளிநாட்டு நாணயத் தாள்கள் உட்பட பல பொருட்களை அப்பிரதேச மக்கள் பாதுகாத்து வருகின்றனர்.
உயிரிழந்தவர்கள் புதைக்கப்பட்ட இடத்தில் நினைவுத்தூண் ஒன்றும் அமைந்துள்ளது. ஆனால் இன்று அப்பகுதி காடாக காட்சியளிக்கின்றது.
இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 4ஆம் திகதி இந்தோனேசியாவிலிருந்து உறவினர்கள் இவ்விடத்திற்கு வந்து செல்வது வழக்கமாகும்.
விமானத்தின் கறுப்புப்பெட்டி தகவலின்படி தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இவ்விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்விமானத்தை செலுத்திய விமானி 8 தடவைகள் இலங்கை ஊடாக மக்காவிற்கு விமானத்தை செலுத்திய அனுபவம் கொண்டவர் என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டிய ஒரு முக்கிய விடயமாகும்.
இவ்விபத்து சம்பவம் நடந்த இடத்தில் வசித்தவர்கள், இன்னமும் அப்பகுதிக்கு செல்பவர்களுக்கு இச்சம்பவத்தை எடுத்துக்கூறுபவர்களாக உள்ளனர்.
Average Rating