50 லட்சம் நஷ்ட ஈடு கொடு -தனுஷ் படத்தயாரிப்பாளர் மீது வழக்கு
ஊசி நுழையாத இடத்திலும் பிரச்சனையை நுழைத்து, சினிமாக்காரர்களை சின்னாபின்னமாக்குவதில் சிலருக்கு அலாதி இன்பம். கால் மேல் கால் போட்டிருக்கும் குஷ்புவை கண்டிப்பதில் துவங்கி, பொல்லாதவன் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்புவது வரை, கடந்தவார கோலிவுட் ஏரியாவில் ஒரே கல்லெறி படலம்! நீ என்னை டாக்டருக்கா படிக்க வச்சே? தியாகராயா கல்லூரியில் பி.ஏ தானே படிக்க வச்சே! என்பார் பொல்லாதவன் படத்தில் தனுஷ். போதாதா… பிடித்துக் கொண்டார்கள் வசமாக! தியாகராயா கல்லூரின்னா சும்மாவா? பின் தங்கிய மக்களுக்கு கல்விப்பணி செய்து வருகிற இந்த கல்லூரியிலிருந்து நீதிபதிகளும், ஐ.ஏ.எஸ் களும் உருவாகி இருக்கிறார்கள். இந்த வசனம் கல்லூரியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பது போலிருக்கிறது என்று பொல்லாதவன் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மன்னிப்பு கேட்பதுடன், 50 லட்சம் நஷ்ட ஈடாக தர வேண்டும் என்றும் அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது. குஷ்பு விவகாரம் இன்னும் கொடுமையானது. வல்லமை தாராயோ படத்துவக்க விழாவில் கலந்து கொண்ட குஷ்பு செருப்பு காலோடு அமர்ந்திருந்தாராம். அதுவும், கால் மேல் கால் போட்டுக் கொண்டு! மேடையில் அமைக்கப்பட்டிருந்த முப்பெரும் தேவியர் சிலைகளுக்கு முன் அவர் இவ்வாறு அமர்ந்திருந்தது இந்து மதத்தையே அவமானப்படுத்தும் செயல் என்று இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் கண்ணன் வெடியை கொளுத்தி போட்டிருக்கிறார். போற போக்கை பார்த்தா இனிமே ஊமை படம்தான் எடுக்கணும் போலிருக்கு!