அசாமில் பழங்குடியினர் போராட்டத்தில் பெண்ணை நிர்வாணமாக்கி தாக்குதல் * “டிவி’யில் ஒளிபரப்பு; பெரும் பரபரப்பு
அசாமில் பழங்குடியினர் நடத்திய போராட்டத்தின்போது பெண் ஒருவர் நிர்வாணப்படுத்தப்பட்டு, தாக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாமில் வசிக்கும் பழங்குடியினர், தங்களுக்கு எஸ்.டி., அந்தஸ்து அளிக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த 24ம் தேதி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு அசாம் அனைத்து ஆதிவாசிகள் மாணவர் அமைப்பு ஆதரவு அளித்தது. கவுகாத்தியில் நடந்த போராட்டத்தின் போது, போராட்டக்காரர்களுக்கும், அங்கு வசிக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது, கலவரமாக மாறியது. ஒருவர் பலியானார்; 250க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த கலவரத்தின்போது, போராட்டத்தில் கலந்து கொண்ட பெண் ஒருவரும் உள்ளூர்வாசிகளால் கடுமையாக தாக்கப்பட்டார். உடைகள் அகற்றப்பட்டு, நிர்வாணப்படுத்தப்பட்ட அந்த பெண், கலவர கும்பலால் ஓட, ஓட விரட்டப்பட்டார். தனியார் “டிவி’ யின் செய்தியில் இந்த காட்சி நேற்று ஒளிபரப்பானது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்ணை தாக்கியவர் கவுகாத்தியைச் சேர்ந்த ரதுல் பர்மன் என தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக பர்மனும் மேலும் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். முதல்வர் தருண் கோகாய் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. ஒரு லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் கோகாய் கூறுகையில், “”இது நாகரிகமற்ற செயல். குற்றாவளிக்கு அதிகபட்ச தண்டனை அளிக்கப்பட வேண்டும். இச்சம்பவம் பற்றி நீதி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது,” என்றார்.
அசாம் பெண்கள் ஆணைய தலைவர் மிருதுலா சகாரியா கூறுகையில், “”இந்த கொடிய செயல் மிகவும் கண்டனத்துக்குரியது. இச்சம்பவம் பற்றி பெண்கள் ஆணையம் விசாரணை நடத்தவுள்ளது. இதுபோன்ற சம்பவம் இங்கு நடப்பது இதுதான் முதல்முறை. குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.