மும்பையில் தீவிபத்து; 2 ஆயிரம் குடிசைகள் சாம்பலானது..!!
மும்பை காந்திவிலி கிழக்கு, ஆகூர்லிமார்க் பகுதியில் உள்ள தாமுநகர் குடிசைப்பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
அந்த வீட்டில் இருந்த சமையல் எரிவாயு தீ பிடித்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது தீப்பிடித்தது.
அப்பகுதியில் குடிசை வீடுகள் என்பதால் தீ மளமளவென எரிந்து பக்கத்து வீடுகளுக்கும் வேகமாக பரவியது.
இதனால் அந்த வீடுகளில் இருந்த சிலிண்டர்களும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.
இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்து போர்க்களம் போல் காட்சி அளித்தது.
இந்த கோர தீ விபத்தில் பிரலாத் கராத்(வயது45) என்பவரும், அடையாளம் தெரியாத சிறுவன் ஒருவனும் உடல் கருகி பலியானார்கள்.
அத்துடன் மேலும் 13 பேர் பாரிய காயங்களுக்குள்ளாகி உள்ளனர்.
16 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு நீண்ட நேர போராட்டத்தின் பின்னர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த தீ விபத்தில் தாமுநகரில் உள்ள சுமார் 2 ஆயிரம் குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமாகி உள்ளதாக மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating