பாகிஸ்தான் எல்லையில் பயங்கர குண்டுவெடிப்பு: 15 பேர் பரிதாப பலி…!!
பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 15 பேர் கொல்லப்பட்டனர். 50-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இவர்களில் நிலைமை மோசமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள பதற்றம் நிறைந்த பழங்குடியினர் பகுதியான குர்ரமில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. பராச்சினார் பகுதியில் உள்ள மார்க்கெட்டில் உள்ள கடைகளில் மக்கள் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த போது குண்டுவெடித்ததில், 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் சம்பவம் நடந்த இடத்தை சுற்றி வளைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் இந்த சம்பவம் தற்கொலைப் படைத் தாக்குதலா அல்லது வெடிகுண்டு தாக்குதலா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
குண்டுவெடிப்பு தாக்குதலில் இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆப்கான் நாட்டுடன் 3 பகுதிகளில் எல்லையை பகிர்ந்து கொள்ளும் குர்ரம் பகுதி, மிகவும் பதற்றம் நிறைந்த பழங்குடியின பகுதியாகும். மேலும் தீவிரவாதிகள் பாகிஸ்தானில் நுழைவதற்கான முக்கிய வழியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating