குமரி மாவட்டத்தில் தொடரும் மழை…!!
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.
திற்பரப்பு பகுதியில் நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் வெள்ளக்காடானது. அங்கு அதிகபட்சமாக 41.2 மில்லி மீட்டர் மழை பதிவானது.
ஆரல்வாய்மொழி, மயிலாடி, பாலமோர், கொட்டாரம், குருந்தன்கோடு, அடையாமடை, முள்ளங்கினா விளை ஆகிய பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. நாகர்கோவிலில் இன்று அதிகாலை லேசான சாரல் மழை தூறியது.
மலையோர பகுதிகளிலும் அணை பகுதிகளிலும் பெய்து வரும் மழையினால் பேச்சிப்பாறை அணைக்கு அதிக அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. திற்பரப்பு அருவியிலும் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சிறுவர் பூங்காவை தாண்டி தண்ணீர் கொட்டி வருகிறது. அங்குள்ள கல்மண்டபத்தை மூழ்கடிக்கும் வகையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பேனர்களும் கட்டப்பட்டு உள்ளது. அந்த அறிவிப்பு பேனரில் மழை அதிகரித்து உள்ளதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. எனவே அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் குமரி மாவட்டத்தில் இருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு சென்றிருந்தனர். அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
குழித்துறை ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கரையோர பகுதி மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 45.75 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1405 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 2 ஆயிரம் கனஅடி வெளியேற்றப்பட்டு வந்தது. இன்று பிற்பகலில் வெளியேற்றப்பட்ட தண்ணீரின் அளவு 1000 கனஅடியாக குறைக்கப்பட்டு உள்ளது. பெருஞ்சாணியின் அணையில் நீர் மட்டம் 75.15 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 324 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 244 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சிற்றாறு–1 அணையின் நீர்மட்டம் 16.40 அடியாகவும், சிற்றாறு–2 அணையின் நீர்மட்டம் 16.50 அடியாகவும் உள்ளது.
அணை மீண்டும் நிரம்பி வருவதால் சிற்றாறு அணைகளில் இருந்து இன்று மாலை உபரி நீர் வெளியேற்றப்படும் என்று தெரிகிறது.
Average Rating