நிலக்கோட்டையில் ராணுவ வீரர் மனைவியை தாக்கி நகை கொள்ளை…!!
நிலக்கோட்டையில் மர்ம நபர்கள் ராணுவ வீரர் மனைவியை தாக்கி நகை–பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
நிலக்கோட்டை இ.பி. காலனி அருகே உள்ள வேல்மாரி நகரைச் சேர்ந்தவர் செல்வம். எல்லை பாதுகாப்பு படையில் வீரராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி யோகேஸ்வரி (வயது 28). கணவர் வெளி மாநிலத்தில் வேலை செய்வதால் இவர் மகன் விஸ்வாவுடன் இங்கு தனியாக வசித்து வருகிறார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று நள்ளிரவு அங்கு வந்தனர். பின் கதவை உடைத்தனர். சத்தம் கேட்டு யோகேஸ்வரி திடுக்கிட்டு எழுந்தார். அவர் சத்தம் போடவே கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள் கத்தி முனையில் மிரட்டினர்.
கூச்சல் போட்டால் கொலை செய்து விடுவதாக கூறினர். மேலும் அணிந்திருக்கும் நகை, கம்மல், கொலுசு ஆகியவற்றை கழற்றித் தருமாறு மிரட்டினர்.
யோகேஸ்வரி மறுத்ததால் அவரை தாக்கி நகைகளை பறித்துக் கொண்டனர். மேலும் பீரோவில் இருந்த ரூ.35 ஆயிரம் பணத்தையும் எடுத்துக் கொண்டு தப்பினர்.
இதுபற்றி யோகேஸ்வரி நிலக்கோட்டை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்கு பதிவு செய்தார். போலீசார் கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்ககளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating