வெம்பாக்கம் அருகே காதலியின் உறவினர்கள் தாக்கியதால் காதலனின் தாய் தூக்குபோட்டு சாவு…!!
வெம்பாக்கம் அடுத்த மாங்கால் காலனியை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் தினேஷ் (வயது 23). இவரும் அதே கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி மகள் காயத்ரியும் (19) கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்தனர்.
தனது வீட்டுக்கு வந்து தன்னை பெண் கேட்குமாறு தினேஷிடம் காயத்ரி கூறியதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து தினேஷின் தாய்மாமன் காயத்ரி வீட்டுக்கு சென்று பெண் கேட்டார். ஆனால் பெண் கொடுக்க காயத்ரியின் பெற்றோர் மறுத்துவிட்டனர்.
இதனால் காதலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்குமேலும் தாமதித்தால் தங்களை பெற்றோர் சேர விடாமல் செய்து விடுவார்கள் என்று நினைத்தனர். இதைத் தொடர்ந்து 2 பேரும் வீட்டைவிட்டு ஓட்டம் பிடித்தனர்.
இது காயத்ரியின் பெற்றோரை மிகவும் அதிர்ச்சியடைய செய்தது. மேலும் அவர்கள் தினேஷ் மீதும் அவரது பெற்றோர் மீதும் ஆத்திரம் அடைந்தனர்.
சம்பவத்தன்று காயத்ரியின் தந்தை ராமமூர்த்தி, தாய் சித்ரா, மாமன் ஏழுமலை, உறவினர்கள் வெங்கடேசன், சரோஜா ஆகியோர் தினேஷின் வீட்டுக்கு சென்றனர். அங்கு தினேஷின் தாய் இல்லாமல்லி (50) இருந்தார்.
அவரிடம் தினேஷை பற்றியும் தங்களது மகளை பற்றியும் கேட்ட காயத்ரியின் பெற்றோர், உறவினர்கள் தரக்குறைவாக பேசி இல்லாமல்லியை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதில் இல்லாமல்லி அவமானம் அடைந்தார்.
சம்பவத்தன்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்கில் தொங்கினார். அக்கம் பக்கத்தினரும், உறவினர்களும் இல்லாமல்லியை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு ஆஸ்பத்திரிக்கு இல்லாமல்லி கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இல்லாமல்லி பரிதாபமாக இறந்தார். இது குறித்து தூசி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating