சொத்துக்காக தாயை கழுத்தை நெரித்து கொன்ற மகன்…!!
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகில் உள்ள சேடபட்டியை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி சின்னத்தாய் (வயது 80). இவர்களுக்கு பகவதி, சிவமணி ஆகிய 2 மகன்களும், மல்லிகா என்ற மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
கோவிந்தன் இறந்து விட்டதால் சின்னத்தாய் தனியாக சேடபட்டியில் வசித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சின்னத்தாய் வீட்டில் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். செம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் சொத்து பிரச்சினை காரணமாக சின்னத்தாயின் மகனே கொலை செய்தது தெரிய வந்தது.
கடந்த 5 வருடங்களுக்கு முன்பு ரூ.1 லட்சம் மதிப்பிலான தனது வீட்டை சின்னத்தாய் தன் மகள் மல்லிகாவுக்கு உயில் எழுதி வைத்து விட்டார். இதனால் மகன் சிவமணி ஆத்திரத்தில் இருந்தார்.
இதனால் தனது தாயை கொலை செய்ய திட்டமிட்டு அழகர்நாயக்கன்பட்டியில் உள்ள தனது உறவினரான முனியாண்டி மகன் வேல்முருகனுடன் திட்டம் தீட்டினார்.
அதன்படி வீட்டில் தனியாக இருந்த சின்னத் தாயை முகத்தில் தாக்கி சேலையால் கழுத்தை இறுக்கி கொலை செய்தனர். போலீசார் மகன் சிவமணியையும் வேல்முருகனையும் கைது செய்தனர்.
Average Rating