புதுக்கோட்டை மீனவர்கள் மேலும் 6 பேர் சிறைப்பிடிப்பு…!!
தமிழகத்தில் இருந்து இந்திய கடல் எல்லையில் மீன் பிடிக்க செல்லும் புதுக்கோட்டை, ராமேசுவரம், நாகை மற்றும் புதுச்சேரி மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடிக்கடி சிறைப்பிடிப்பதும், துரத்தி அடிப்பதும் நடந்து வருகிறது. இந்திய கடல் எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதாக அவர்கள் மீது குற்றம் சாட்டி சிறையில் அடைக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் 2 ஆயிரம் பேர் நேற்று அதிகாலை 500–க்கும் மேற்பட்ட விசைபடகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இதில் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த குப்புராஜ் என்பவரின் விசைப்படகில் அவரது மகன் தமிழ்செல்வன், ரெங்கையன் மகன் ராமச்சந்திரன், அந்தோணி மகன் அருளானந்தம், மற்றும் மணிகண்டன், மூர்த்தி, செல்வமணி ஆகிய 6 பேர் சென்றனர். இன்று அதிகாலை அவர்கள் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 6 பேரையும் சிறை பிடித்தனர். விசைப்பட கையும் பறிமுதல் செய்தனர். பின்னர் 6 பேரையும் கைது செய்து காங்கேசன் துறை முகத்துக்கு அழைத்து சென்றனர்.
கடந்த 17–ந்தேதி ஜெகதாப் பட்டினத்தை சேர்ந்த ராமமூர்த்தி, ஜெயபால், வீரா மற்றும் ஒருவர் ஆகிய 4 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். இந்நிலையில் இன்று 6 பேர் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் அவர் களது குடும்பத்தினர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனே மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டு மென மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது பற்றி ஜெகதாப்பட்டினம் விசைபடகு மீனவர் சங்க துணை தலைவர் ராமதேவன் கூறியதாவது:–
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து சிறை பிடிக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. ஏற்கனவே 12 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். 14 விசைபடகுகளை பறிமுதல் செய்துள்ளனர். இன்று 6 பேரை சிறைபிடித்துள்ளனர்.
சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். விசைபடகுகளை பறிமுதல் செய்துள்ளதால் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரின் நடவடிக்கையால் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவே அச்சமாக உள்ளது. எனவே சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், விசை படகுகளையும் விடுவிக்க மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Average Rating