சிறப்பு விசா குறித்து லண்டன் ஐகோர்ட்டு மறு ஆய்வு
இங்கிலாந்து நாட்டில் பணிபுரிவதற்காக எச்.எஸ்.எம்.பி. என்னும் சிறப்பு விசா பெற்று தகுதி அடிப்படையில் ஏராளமான வெளிநாட்டு தொழில் பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் இங்கிலாந்திலேயே குடியேறும் வகையில்தான் முதலில் விசா வழங்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு இது தொடர்பான சட்டத்தை இங்கிலாந்து அரசு திருத்தி அமைத்தது. இந்தச் சட்டத்தை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று கோரி சிறப்பு விசா பெற்றவர்கள் அமைப்பு சார்பில் லண்டன் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி சுல்லிவன் “அரசு சட்டத்தை மாற்றியமைத்ததில் சில விதிமுறைகள் மீறப்பட்டிருப்பதாக தெரிகிறது. எனவே இந்த மனுவை நீதிமன்றம் மறு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும். இந்த மனுவின் மீது 2 மாதங்களுக்குள் விசாரணை நடத்தி முடிக்கப்படும்” என்று கூறினார். இது இங்கிலாந்தில் பணிபுரியும் தகுதி மேம்பட்ட இந்திய பணியாளர்களுக்கு லேசான நிம்மதியைக் கொடுத்துள்ளது.