1993 இல் கொன்று புதைக்கப்பட்டவரின் சடலம் சனிக்கிழமை தோண்டியெடுப்பு
1993 ஆம் ஆண்டு அநுராதபுரம் நெலுங்குளம் பகுதியில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சடலமொன்று, சனிக்கிழமை தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜயந்த ஜயசிங்க தெரிவித்தார். இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது; கொலை செய்யப்பட்டவரான மாத்தளை, தேவஹுவ பகுதியைச் சேர்ந்த டி. புஞ்சிபண்டா (46 வயது) என்பவர் தனது உறவினர்கள் வாழ்ந்துவரும் நெலும்குளம் பகுதிக்கு வந்துள்ளார். இங்கு ஏற்பட்ட தகராறின் போது இவர் உறவினர்களாலேயே கொலை செய்யப்பட்டிருக்கின்றார். இச்சம்பவத்தை நேரில் பார்த்த, தற்போது 27 வயதுடைய இப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பொலிஸாருக்கு கடந்தவாரம் இத்தகவலை வழங்கியதை அடுத்தே அநுராதபுரம் நீதிமன்ற ஆணையைப் பெற்று நீதிபதி வஸந்த ஜினதாச முன்னிலையில் இச்சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.