அமெரிக்காவில் பெருகிவரும் இனவெறி: மேலும் ஒரு சீக்கிய முதியவர் மீது கொடூர தாக்குதல்..!!
அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் வாழ்ந்துவரும் அம்ரிக் சிங் பால்(68) என்பவர் கடந்த சனிக்கிழமை காலை இங்குள்ள பிரெஸ்னோ பகுதியில் வேலைக்கு செல்வதற்காக சாலையோரம் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது ஒரு காரில்வந்த இரு வெள்ளையர்கள் அவரைப் பார்த்து வாய்க்குவந்தபடி திட்டத் தொங்கினார்கள்.
நமக்கெதற்கு வீண்வம்பு? என்று யோசித்த அம்ரிக் சிங் பால், சாலையை கடந்து எதிர்புறமாக செல்ல தொடங்கினார். அப்போது காரை பின்புறமாக இயக்கிய ஒருவர் வேகமாகவந்து அம்ரிக் சிங் பால் மீது மோதினார். இதில் நிலைகுலைந்து கீழேவிழுந்தவரை வயதில் முதியவர் என்றும் பாராமல் மனம்போன போக்கில் இருவரும் அடித்து உதைத்துவிட்டு, அங்கிருந்து காரில் தப்பிச்சென்றனர்.
முகம் மற்றும் மார்பு பகுதிகளில் அவர்கள் சரமாரியாக குத்தியதால் மூக்கு மற்றும் தலைபகுதியில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. கழுத்து எலும்பு முறிவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் இந்த இனவெறி தாக்குதல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள கலிபோர்னியா நகர போலீசார், குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.
அமெரிக்காவில் சமீபகாலமாக சீக்கியர்களை குறிவைத்து இதைப்போன்ற கொடூர தாக்குதல்கள் நடந்துவருகின்றன.
கடந்த 2012-ம் ஆண்டு விஸ்கான்சின் பகுதியில் உள்ள சீக்கிய கோயிலுக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த ஒருவன் ஆறு சீக்கியர்களை சுட்டுக் கொன்றான். கடந்த 2013-ம் ஆண்டு இதே பிரெஸ்னோ நகரில் உள்ள ஒரு சீக்கிய கோயில் அருகே 82 வயது சீக்கிய முதியவரை ஒருவன் முரட்டுத்தனமாக தாக்கினான். கடந்த 2014-ம் ஆண்டு தீவிரவாதி என்று நினைத்து ஒரு சீக்கியரின் மீது காரை ஏற்றிய ஒருவன் சுமார் 30 அடிதூரம் வரை அவரை காரால் தள்ளியபடி இழுத்துச் சென்றான். கடந்த செப்டம்பர் மாதம் அல் கொய்தா தீவிரவாத இயக்கத் தலைவன் பின்லேடன் போல இருப்பதாக கூறி ஒரு சீக்கிய முதியவர் தாக்கப்பட்டார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அம்ரிக் சிங் பால் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அமெரிக்காவில் வாழும் சீக்கிய மக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளதாக இங்குள்ள சீக்கியர்நல அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.
Average Rating