பட்டப்பகலில் கல்லூரி மாணவியை காருக்குள் இழுத்துப்போட்டு கடத்திய கும்பல்: சிறிது நேரத்தில் விடுவிப்பு…!!
டெல்லி அருகே குர்கானில் இன்று பட்டப்பகலில் கல்லூரி மாணவி ஒருவர் காரில் கடத்தப்பட்டார். டிஎஸ்டி கல்லூரியில் படிக்கும் அந்த மாணவி, இன்று காலை கல்லூரியின் வாசல் அருகே வந்துகொண்டிருந்தபோது, காரில் வந்த கும்பல், திடீரென அந்த பெண்ணை காருக்குள் இழுத்துப் போட்டுக்கொண்டு கடத்திச் சென்றது. அந்தப் பெண் தன்னை காப்பாற்றும்படி கூச்சலிட்டார். இதனால், அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகினது. இதை வைத்து, மாணவியை கடத்தச் சென்ற வெள்ளை நிற கார் பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, காரில் 4 பேர் வந்ததாகவும், கார் நம்பர் பிளேட்டை சேறு பூசி மறைத்திருந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, கடத்திச் செல்லப்பட்ட மாணவி சில மணி நேரங்களில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அந்த மாணவியை 3 நபர்கள் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாகவும், மாணவியும் அந்த நபர்களும் ஏற்கனவே அறிமுகமானவர்கள் என்றும் குர்கான் போலீஸ் கமிஷனர் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட 3 மாணவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating