ரமாடி நகரை கைப்பற்றிய ஈராக் படைகளுக்கு அமெரிக்கா பாராட்டு…!!
ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து ரமாடி நகரை மீட்ட ஈராக் படைகளுக்கு அமெரிக்க ராணுவத்துறை செயலாளர் ஆஷ் கார்ட்டர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிக் ஸ்டேட் இன் ஈராக் அன்ட் சிரியா என்ற நோக்கத்தில் தீவிரவாத இயக்கத்தை ஆரம்பித்த ஐ.எஸ். படையினர், ஈராக் மற்றும் சிரியாவில் சில பகுதிகளை கைப்பற்றி, பரந்து, விரிந்த இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை அமைக்க திட்டமிட்டிருந்தனர். அவர்களது முதல் இலக்காக இருந்த ஈராக்கில் உள்ள அன்பர் மாகாண தலைநகரான ரமாடி நகரை கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைப்பற்றினர். அங்கிருந்தவாறே சுற்றுப்பட்டு பகுதிகளையும் ஆக்கிரமிக்க தொடங்கிய தீவிரவாதிகள், ஏராளமான அப்பாவி மக்களை கொன்று குவித்ததுடன், அழகான இளம்பெண்களை கடத்திச் சென்று அவர்களை செக்ஸ் அடிமைகளாக மாற்றி சித்ரவதை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ரமாடி நகரை மீண்டும் கைப்பற்றி விட்டால் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொட்டத்தை அடக்கிவிடலாம் என ஈராக் ராணுவ தளபதி முடிவு செய்தார். இதையடுத்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் விமானப்படைகள் வானில் பறந்து குண்டுமழை பொழிய, தரைவழியாக முன்னேறிச் சென்று ரமாடி நகரை மீட்டேத்தீருவது என்ற போர் திட்டம் வகுக்கப்பட்டது.
இதையடுத்து, சுமார் பத்து நாட்களாக ரமாடி நகரை முற்றுகையிடும் ராணுவத்தின் அதிரடி ஆபரேஷன் தொடங்கியது. இதன் விளைவாக ரமாடி நகரை கைப்பற்றியுள்ளதாக ஈராக் அரசு நேற்றிரவு அறிவித்துள்ளது. நகரின் பாதுகாப்பு நிர்வாகத்தை வழக்கம்போல் போலீசார்வசம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக ஈராக் பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஈராக்-சிரியா இடையே உள்ள எல்லையோர நகரமான மோசூல் நகரை கைப்பற்றி, அங்கு முகாமுட்டுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளையும் நாட்டை விட்டு விரட்டி அடிப்போம் என ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து ரமாடி நகரை மீட்ட ஈராக் படைகளுக்கு அமெரிக்க ராணுவத்துறை செயலாளர் ஆஷ் கார்ட்டர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ரமாடி நகரை தற்போது கைப்பற்றி அங்கிருந்து ஐ.எஸ். தீவிரவதிகளை விரட்டியடித்த ஈராக் படைகளின் இந்த நடவடிக்கையானது, அந்த காட்டுமிராண்டிகளை தோற்கடிக்கும் பிரசாரத்தின் முதல்படியாக அமைந்துள்ளது. ரமாடி நகரில் இருந்து வெளியேறிய மக்களை அங்கு மீள்குடியேற்றம் செய்வது, மீண்டும் ஒருமுறை தீவிரவாதிகளின் பிடிக்குள் அந்த நகரம் விழுந்துவிடாமல் தடுப்பது, அங்கு அமைதியை நிலைநாட்டுவது போன்றவற்றை உறுதிப்படுத்த வேண்டியது போன்றவை தற்போது ஈராக் அரசின் முக்கிய கடமையாக உள்ளது என இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆஷ் கார்ட்டர் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating