37 விடுதலைப்புலிகள் பலி
இலங்கையில் நடைபெற்ற மோதலில் 37 விடுதலைப்புலிகளும், இலங்கை ராணுவ வீரர் ஒருவரும் கொல்லப்பட்டனர். மன்னார் மாவட்டத்தில் உள்ள ஆடம்பம் என்ற இடத்தில் ராணுவத்தினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 35 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாக இலங்கை தேசிய பாதுகாப்பு ஊடக மையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த மோதலில் ராணுவத்தை சேர்ந்த 6 வீரர்கள் காயமடைந்ததாக அவர் மேலும் கூறியுள்ளார். இதனிடையே யாழ்ப்பாணத்தில் உள்ள முகமலை பகுதியில் பாதுகாப்பை மீறி ராணுவ தளத்திற்குள் நுழைய முயன்ற இரண்டு விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாகவும், விடுதலைப்புலிகளின் இரண்டு பதுங்குகுழிகள் அழிக்கப்பட்டதாகவும் இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. மற்றொரு சம்பவத்தில் விடுதலைப்புலிகள் மறைத்து வைத்திருந்த நிலக்கண்ணி குண்டு வெடித்ததில் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.மட்டக்களப்பில் விடுதலைப்புலிகளின் இயக்கத்திலிருந்து வெளியேறிய தம்பிமுத்து நடராஜா என்பவர் விடுதலைப்புலிகளால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இதனிடையே வவுனியாவில் ராணுவத்தினர் நடத்திய தேடுதல் வேட்டையின் போது வானொலி தொலை தொடர்பு சாதனம் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.