ஓடும் ரெயில் கழிப்பறையில் பிறந்து தண்டவாளத்தில் வழுக்கி விழுந்தும் உயிர் பிழைத்த பெண் குழந்தை…!!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஓடும் ரெயிலின் கழிப்பறையில் பிறந்து தண்டவாளத்தில் வழுக்கி விழுந்தும் உயிர் பிழைத்த பெண் குழந்தையைப் பற்றிய பரபரப்பு செய்திகள் வெளியாகியுள்ளன.
நேபாள நாட்டை சேர்ந்த புஷ்பா என்ற கர்ப்பிணிப் பெண் கடந்த திங்கட்கிழமை பிற்பகல் தனக்பூர்-பரேலி ரெயிலில் தனியாக பயணம் செய்தபோது அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, கழிப்பறைக்கு சென்ற அவர் உச்சபட்ச பிரசவ வலியால் அலறினார். உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள போஜ்பூர் நிலையத்தை ரெயில் நெருங்கியவேளையில், பெண் குழந்தையை பிரசவித்தபோது, கீழே நழுவி, கழிப்பறை பீங்கான் வழியாக வழுக்கிய குழந்தை தண்டவாளங்களுக்கு இடையில் விழுந்தது.
இதைக்கண்ட புஷ்பா அலறித்துடித்து கதறியதையடுத்து, அங்கு விரைந்துவந்த இதர பயணிகள் நிலைமையை உணர்ந்துகொண்டு ரெயிலில் இருந்த அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். ரெயிலின் வேகத்தை குறைத்து டிரைவர் நிறுத்தியதும் கீழே இறங்கி ஓடிய சிலர் தண்டவாளத்தில் சிறு காயங்களுடன் கிடந்த குழந்தையை தூக்கி, காப்பாற்றினர்.
இதற்குள் போஜ்பூர் ரெயில் நிலையை அதிகாரிகளை தொடர்புகொண்ட ரெயிலின் டிரைவர் கூறிய தகவலையடுத்து, அங்கு ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் தயார்நிலையில் காத்திருந்தது. போஜ்பூரில் தாயையும், சேயையும் ரெயிலில் இருந்து இறக்கிய சிலர் அவர்களை ஆம்புலன்சில் ஏற்றி, ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு குழந்தையின் காயங்களுக்கு மருந்திட்டு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் புஷ்பாவும் அவரது பெண் குழந்தையும் குணமடைந்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
Average Rating