சொந்த மண்ணில் முரளி உலக சாதனை!
கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் அதிகூடிய விக்கெட்டுக்களைப் பெற்றவர் என்ற உலக சாதனையை இலங்கையின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இன்று நிலைநாட்டியுள்ளார். அவுஸ்திரேலியா பந்துவீச்சாளர் ஷேன் வோர்னின் உலக சாதனையை முறியடித்தே இச்சாதனையை அவர் படைத்துள்ளார். 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 708 விக்கெட்டுக்களைப் பெற்ற அவுஸ்திரேலியா பந்துவீச்சாளர் ஷேன் வோர்னின் சாதனையை முரளிதரன் நேற்று சமப்படுத்தினார். 116 போட்டிகளில் விளையாடி 710 விக்கெட்டுக்களை பெற்றதன் மூலம் இன்று அச்சாதனையை இவர் முறியடித்துள்ளார். இலங்கை இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் கிரிக்கட் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளான இன்று தமது சொந்த ஊரான கண்டி அஸ்கிரிய மைதானத்தில் வைத்தே இச்சாதனையை அவர் நிலைநாட்டியுள்ளமை சிறப்பம்சமாகும். இதேவேளை, டெஸ்ட் போட்டியில் முரளிதரன் உலக சாதனை நிகழ்த்தியதை முன்னிட்டு இலங்கை தபால் திணைக்களம் முரளிதரனின் படத்தை தாங்கிய வட்ட வடிவிலான முத்திரையொன்றை இன்று வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கை வரலாற்றில் வட்ட வடிவிலான முத்திரையொன்று வெளியிடப்படுவது இதுவே முதல் முறையாகும்.
முரளிதரன் தனது கரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுமுன்னர் 1000 விக்கெட்டுக்களை வீழ்த்துவார் என அவரது ரசிகர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள முரளிதரன், “நான் இன்னும் 4 அல்லது 5 வருடங்கள் விளையாடுவேன். எனவே அந்த 1000 விக்கெட் சாதனையை மிக இலகுவாக முறியடித்துவிடுவேன்” என்று கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.