கஞ்சா கடத்தியவருக்கு 7 மாத சிறை தண்டனை
ஏழு கிலோ கஞ்சா கடத்திய வாலிபருக்கு 7 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சென்னை மணலி சாலை சந்திப்பு கொடுங்கையூர் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக, போதைப் பொருள் கடத்தல் தடுப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த 2002 ஆகஸ்ட் 2ம் தேதி அவர்கள் மணலி சாலை சந்திப்பில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு ராஜா (28) என்ற ஒரு வாலிபர் கையில் பாலிதீன் கவருடன் நின்று கொண்டிருந்தார். அவரை சோதனையிட்ட போலீசார் அவரிடமிருந்து 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்த போலீசார், அவர் மீது போதைப் பொருள் தடுப்பு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போதைப் பொருள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.ஜெ.முருகானந்தம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு சிறப்பு வக்கீல் ஜி.தேவராஜன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக அறிவித்து ராஜாவுக்கு 7 மாத சிறைத் தண்டனையும் ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்தார்.