முழுப்பலத்தையும் பிரயோகித்து வன்னி பிரதேசத்தில் வைத்தே புலிகள் இயக்கத்தை முற்றாக அழிப்போம். ஊடக அமைச்சர்…!
வன்னி பிரதேசத்தில் வைத்தே புலிகள் இயக்கத்தினரை முற்றாக அழிப்போம். அதற்கான முழுப்பலத்தையும் அரசாங்கம் பிரயோகிக்கும். மிலேச்சத்தனமான தாக்குதலை புலிகள் தொடர்வதற்கு இனிமேலும் அனுமதிக்க முடியாது. அவர்களை அழிப்பதற்கான தேவை எழுந்துள்ளது என்று அமைச்சரவையின் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் இங்கு மேலும் தெரிவித்ததாவது: வன்னி என்ற சிறிய வட்டத்திற்குள் முடக்கப்பட்டுள்ள புலிகள் பலவீனமடைந்துள்ள நிலையில் தமது விரக்தியை மறைப்பதற்காக பொதுமக்களை இலக்குவைத்து மிலேச்சத்தனமாக தாக்குதலை மேற்கொள்கின்றனர். இதனை அனுமதிக்க முடியாது. அவர்களின் பலமான தளங்கள் தாக்கி அழிக்கப்படும். இவ்வாறு ஊடக அமைச்சர் தெரிவித்தார்.