மத்திய கிழக்கிற்கான விஜயத்தை புஷ் ஜனவரியில் மேற்கொள்ளவிருப்பதாக வெள்ளைமாளிகை அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் எதிர்வரும் ஜனவரியில் மத்திய கிழக்கிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இவ் அறிவிப்பு புஷ்ஷினால் ஏற்பாடு செய்யப்பட்ட அமைதி மாநாட்டில் கலந்துகொண்ட இஸ்ரேலிய பாலஸ்தீனத் தலைவர்கள் 2008 இற்கு முன்னர் அமைதி உடன்படிக்கையொன்றை அடைவதென உறுதியளித்த ஒரு வாரத்தின் பின்னர் வெளியாகியுள்ளது. மத்திய கிழக்கிற்கான தனது விஜயத்தின் போது புஷ் இஸ்ரேலுக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்களில் வெளியான தகவல்களை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தவில்லை. ஆனால், புஷ் இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொள்வாரென பெரும்பாலும் நம்பப்படுவதாக வாஷிங்டனிலுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புஷ் ஜனாதிபதியாக இஸ்ரேலுக்கு விஜயம் மேள்கொள்வது இதுவே முதல் தடவையாகும். ஈரான் அணுவாயுதங்களைத் தயாரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லையென அமெரிக்க புலனாய்வு சேவையொன்றின் அறிக்கை தெரிவித்திருப்பதைத் தொடர்ந்து இவ்விஜயத்தின் போது ஈரான் விவகாரமும் முக்கிய இடத்தைப் பிடிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஈரானின் அணு நிகழ்ச்சித் திட்டம் உலகிற்கு அச்சுறுத்தலென புஷ் மீளவும் வலியுறுத்தியுள்ளார்.