தமிழ்நாட்டிற்கு விடுதலைப்புலிகளால் அச்சுறுத்தல் இல்லை: சென்னையில் ராணுவ தளபதி பேட்டி
தென் பிராந்திய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் நோபிள் தம்புராஜ் கடந்த அக்டோபர் மாதம் பதவி ஏற்றிருந்தார். அதன் பிறகு முதல் முறையாக சென்னை வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டிய ளித்தார். அவர் கூறியதாவது:- ராணுவத்தில் 12 ஆயிரம் அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ளது. இது கவலை அளிக்கிறது. இந்த பணியிடங்களுக்காக நிறைய விண்ணப்பங்கள் வருகின்றன. ஆனால் நாங்கள் எதிர்பார்க்கும் தகுதிகள் இல்லாத காரணத்தால் நிறைய பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. பொறியியல் கல்லூரிகளில் ராணுவ படிப்பு குறித்தும் விரிவாக எடுத்துரைக்க சொல்லியுள்ளோம். பட்டதாரி மாணவ- மாணவிகள் ராணுவத்தில் சேருவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. எனவே இதை தமிழக மாணவ-மாணவிகள் பயன்படுத்திக் கொண்டு ராணுவத்தில் சேரவேண்டும் விரைவில் 12 ஆயிரம் காலி பணியிடங்களையும் நிரப்ப ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளோம். இலங்கையில் இருந்து அகதிகள் தமிழ் நாட்டுக்கு வருவதால் கடலோர காவல்படையும், கப்பல் படையும் ரோந்து நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை-இந்தியா கூட்டு ரோந்துக்கான வாய்ப்பு இல்லை. விடுதலைப்புலிகள் விவகாரம் அரசியல் சம்பந்தப்பட்ட விவகாரம் ஆகிவிட்டது.
விடுதலைப்புலிகள் தமிழ் நாட்டில் ஊடுருவாமல் இருக்க கடலோர காவல் படையும் கப்பல் படையும் தீவிரமாக கண்காணிக்கின்றன. விடு தலைப்புலிகளால் தற்போது அச்சுறுத்தல் எதுவும் கிடையாது. வெளிநாட்டை விட உள்நாட்டு தீவிரவாத இயக்கங்களால் தான் அதிக அச்சுறுத்தல் உள்ளது. இதை சமாளிக்க அந்தந்த மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ராணுவமும் அதற் கேற்ப தங்களை தயார் படுத்தி வைத்துள்ளது.
பாகிஸ்தானில் தற் போது நிலையற்ற தன்மையே நிலவுகிறது. அவர்கள் அணுசோதனை நடத்தி னால் உலக அளவில் பிரச்சனையாகிவிடும். இதனால் பாகிஸ்தானை உலக நாடுகள் தீவிரமாக கண்காணிக்கின்றன. அதிநவீன ஏவுகணைகளை எதிர்த்து தாக்கக்கூடிய தொழில் நுட்பம் குறித்து இந்திய ராணுவம் ஆராய்ச்சி செய்து வருகிறது. அக்னிவரிசை ஏவுகணைகளை ராணுவத்தில் சேர்க்கும் பணி படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வேலூரில் ராணுவபள்ளி ஆரம்பிக்க முன்னாள் ராணுவத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து பரிசீலித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.