கை,கால் விரல்களில் நகங்களுக்கு இடையே மரம்போல் வளர்ந்திருக்கும் மருக்கள்: வங்காளதேச வாலிபரின் சோகக்கதை..!!
வங்காளதேச நாட்டிலுள்ள தெற்கு மாநிலங்களில் ஒன்றான குல்னா மாவட்டத்தை சேர்ந்தவர் அப்துல் பஜந்தர்(26). சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர் இவரது கை,கால் விரல்களில் நகங்களுக்கு இடையே மரம்போன்ற உறுதியுடன் பாலுண்ணி மருக்கள் தோன்ற ஆரம்பித்தன.
அப்போது அதைப்பற்றி பெரிதாக கவலைப்படாத அப்துல், நாளடைவில் அந்த மருக்கள் மரம்போன்ற உறுதியுடன் மட்டுமின்றி வேகமாகவும் வளர்வதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இருகைகளின் விரல்களிலும் மூன்று அங்குலத்தை தாண்டி வளர்ந்திருக்கும் இந்த மருக்களால் அவருக்கு உள்ளூரில் ‘மரம் மனிதன்’ என்ற பட்டப்பெயெர் உருவானது. இவரை ஒரு அதிசய மனிதராக பார்த்துச் செல்ல அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்தும் பலர் வர தொடங்கினார்கள்.
கால் விரல்களிலும் இதேபோல் மருக்கள் வளர்ந்திருக்கும் நிலையில் ஒரு குழந்தைக்கு தந்தையாகிவிட்ட அப்துலால் எந்த வேலைக்கும் செல்ல முடியவில்லை. இதனால் வறுமை நிலையில் வாடும் இவரைப்பற்றிய தகவல்கள் மெல்ல ஊடகங்களின் வழியாக பரவத் தொடங்கியதையடுத்து, கை,கால் விரல்களில் இருக்கும் நரம்புகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இந்த மருக்களை எல்லாம் ஆபரேஷன் மூலம் அகற்ற தலைநகர் டாக்காவில் உள்ள அரசு பொது மருத்துவமனை டாக்டர்கள் முடிவு செய்தனர்.
இதையடுத்து, நேற்று முன்தினம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த ஆபரேஷனை முற்றிலும் இலவசமாகவே செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், டாக்கா ஆஸ்பத்திரிக்கு வரும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் இங்கேயும் அவரை ஒரு காட்சிப் பொருளாகவே பார்த்துச் செல்கின்றனர்.
Average Rating