ஏற்காட்டிற்கு வந்த சுற்றுலா பயணி திடீர் மரணம்…!!
சென்னையில் உள்ள தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 100 பேர் இன்ப சுற்றுலாவிற்காக நேற்று ஏற்காட்டிற்கு வந்தனர். இவர்கள் அனைவரும் ஏற்காடு படகு இல்ல பகுதியிலுள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கினார்கள்.
ஏற்காட்டிலுள்ள முக்கிய சுற்றுலா தலங்களை பார்வையிட்ட பின்பு தங்கும் விடுதிக்கு வந்தனர். அவர்களில் சிலர் இரவு சுமார் 2 மணி வரை மது அருந்தியதாக கூறப்படுகிறது. அதன் பிறகு அவர்கள் ஓட்டல் அறையில் தூங்கினார்கள்.
இன்று காலையில் நவீன் (வயது38) என்பவர் மூக்கிலிருந்து ரத்தம் வடிந்த நிலையில் பேச்சு, மூச்சு இல்லாமல் படுக்கையிலே கிடந்தார். இதனைக் கண்டதும் அவருடன் தங்கியிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே ஓட்டல் ஊழியர்களை அழைத்து அவர்கள் உதவியுடன் நவீனை மீட்டு சிகிச்சைக்காக ஏற்காடு அரசு மருத்துவ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நவீன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து ஏற்காடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் குமரன், சப்–இன்ஸ்பெக்டர் ஹரிகரன் மற்றும் போலீசார் நவீன் மாரடைப்பால் இறந்தாரா? அல்லது அளவுக்கு அதிமாக மது அருந்தியதால் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் இறந்தாரா? என்பன போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் நவீன் இறப்பு குறித்த முழு தகவல்களும் தெரியவரும். இறந்த நவீனுக்கு புஸ்பா (வயது 34) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
Average Rating