பாகிஸ்தானில் 12 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை…!!
பாகிஸ்தானில் போலீஸ் படையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 12 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
பாகிஸ்தானில் சிந்து மாகாணம், தொடர்ந்து தீவிரவாதிகள் தாக்குதலால் நிலை குலைந்து வருகிறது. இதன்காரணமாக தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் அங்கு முடுக்கி விடப்பட்டு, முழுவீச்சில் நடந்து வருகின்றன.
அங்கு இந்த மாத தொடக்கத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி வேட்டையில் லஷ்கர் இ ஜாங்வி தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தளகர்த்தர்களான நயீம் புகாரி, பரூக் பட்டி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தி முக்கிய தகவல்களை கறந்தனர்.
அதில் கராச்சி நகரில் பிப்ரி பகுதியில் அல்கொய்தா மற்றும் லஷ்கர் இ ஜாங்வி தீவிரவாத இயக்க உறுப்பினர்கள் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு பாகிஸ்தான் போலீசார் அதிரடி வேட்டை நடத்த முடிவு எடுத்தனர்.
அதன்படி நேற்று அதிகாலையில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறப்பட்ட பகுதியை போலீஸ் படையினர் சுற்றி வளைத்தனர். அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகளை சரண் அடையுமாறு அவர்கள் அழைப்பு விடுத்தனர்.
ஆனால் தீவிரவாதிகள் அதற்கு செவி சாய்க்கவில்லை. அதற்கு பதிலாக அவர்கள் போலீஸ் படையினர் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட தொடங்கினர்.
உடனே போலீசாரும் தக்க பதிலடி கொடுத்தனர். இந்த துப்பாக்கிச்சண்டை நீண்ட நேரம் நடந்தது. அதன் முடிவில் 8 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 4 தீவிரவாதிகள் இருட்டை பயன்படுத்தி அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்தனர்.
ஆனால் போலீஸ் படையினர் விடவில்லை. அவர்களை துரத்திச் சென்று, காதப் பகுதியில் வைத்து சுட்டு கொன்றனர். இதனால் இந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது. சம்பவ இடத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த தாக்குதல்கள் தொடர்பாக போலீஸ் சீனியர் சூப்பிரண்டு ராவ் அன்வர் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச்சண்டை குறித்து விவரித்தார். கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அப்போது அவர், “ துப்பாக்கிச்சண்டை நடந்த பிப்ரி பகுதியில், தற்கொலைப்படை தீவிரவாதிகள் அணிகிற வெடிகுண்டுகள் இணைக்கப்பட்ட பெல்ட்டுகள், வெடிகுண்டுகள், கையெறி குண்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இந்த சண்டையின் போது 2 போலீசார் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது அவர்கள் அபாய கட்டத்தை தாண்டி விட்டார்கள். அவர்களது உடல்நிலை தற்போது ஸ்திரமாக உள்ளது” என கூறினார்.
Average Rating