கன்னிப்பெண்கள் தான் மெய்க்காவலர்கள் * பிரான்சில் லிபியா அதிபர் கடாபி அசத்தல்
லிபிய நாட்டின் அதிபர் கர்னல் முவாம்மர் கடாபி, பிரான்சில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.அவரை சுற்றிலும், அழகுப் பதுமைகளாக, துப்பாக்கி ஏந்திய 30 கன்னிப் பெண்கள், மெய்க்காவலர்களாக, 24 மணி நேரமும் நிற்கின்றனர். தீவிரவாதத்தாலும், சர்வதேச நாடுகளின் பொருளாதார தடையாலும் தனிமைப்பட்டு இருந்த, ஆப்பிரிக்க நாடான லிபியா, 1995ம் ஆண்டுக்குப் பின், பல்வேறு நாடுகளுடனும் உறவை புதுப்பித்து வருகிறது. இதைத் தொடர்ந்து, பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோசியின் அழைப்பை ஏற்று பாரிஸ் வந்துள்ளார் கடாபி. எப்போதும், முஸ்லிம் நாடுகளின் கலாச்சாரப்படி தடிமனான மேலங்கியுடன் காட்சி அளிப்பார் கடாபி. எங்கு சென்றாலும், தனது சொந்த, தற்காலிக குடிலில் தான் தங்குவார். தன்னுடன் ஒட்டகத்தையும் அழைத்து வருவார். தற்காலிக குடிலில் ஒட்டகத்துடன், பிறரை சந்திப்பதும், வாழ்த்து தெரிவிப்பதும் தான் லிபியா நாட்டு கலாசாரம். இதற்கு ஏற்ப, கடாபிக்கு பாரிசில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தனி விமானத்தில் பாரிஸ் வந்து இறங்கிய கடாபியை சுற்றிலும், நீல நிற சீருடை அணிந்த 30 மெய்க்காவலர்கள். அனைவரும் கன்னிப் பெண்கள். நகப்பூச்சு, உதட்டுச்சாயம், அலைஅலையான தலைமுடி என்று பெண்மையின் அனைத்து இலக்கணத்தை கொண்ட, அழகுப் பதுமைகளாக இருந்தனர். அனைவரிடமும் இயந்திரத் துப்பாக்கி. கடாபிக்கு ஆபத்து ஏற்பட்டால், தங்கள் உயிரை கொடுக்கவும், எதிரிகளின் உயிரை எடுக்கவும், சிறப்பான பயிற்சி பெற்றவர்கள். கடாபியை 24 மணி நேரமும் பாதுகாப்பவர்கள் இந்த பெண்கள் தான். பெண் மெய்க்காவலர்கள் புடை சூழ, பிரான்சில் சுற்றுப்பயணத்தை தொடர்ந்து வருகிறார் கடாபி.