இமயமலை பனி உருகினால் இந்தியா பாக்., போர் வரும்?
இமயமலை பனி உருகினால், பெரும் இயற்கை அழிவுகள் மட்டும் ஏற்படாதாம்; இந்திய துணைக் கண்டத்தில் போர் அபாயமும் உண்டாம்! ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிபுணர்கள் தான் இந்த அபாய சங்கை ஊதியுள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலக வெப்பமயமாதல் காரணமாக, இமயமலை பனி உருகும் வேகம் அதிகரிக்கும். சுற்றுச்சூழல் மாசுபடுவது அதிகரிப்பதால், உலக வெப்பமயமாதலும் அதிகரிக்கிறது. அதனால், பனி மலைகள் உருகும்; வெள்ளம் பெருக் கெடுக்கும்; வறட்சி தாண்டவமாடும்; கடலோரம் வாழும் பல லட்சம் பேர் வீடிழப்பர்; அகதிகளாக தங்க வேண்டிய அபாயம் உண்டு. இந்த இயற்கைச் சீற்றங்களாலும், குழப்பங்களாலும், இந்தியா பாகிஸ்தான், இந்தியா வங்கதேசம் இடையே எல்லை தகராறு அதிகரிக்கும் ஆபத்தும் ஏற்படலாம். இவ்வாறு ஐ.நா., நிபுணர்கள் கூறினர்.இந்தோனேசிய பாலியில் நடந்த சர்வதேச உலக வெப்பமயமாதல் தடுப்பு மாநாட்டில் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதில் பங்கேற்ற இந்திய அறிவியல் தொழில் நுட்ப அமைச்சர் கபில் சிபல், உலக வெப்பமயமாதலை தடுக்க இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கம் தந்தார். பெட்ரோல், டீசல், காஸ் போன்ற எரிபொருள் அதிகம் பயன்படுத்தப்படுவதால், சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கிறது. அதனால், உலக வெப்பம் அதிகரிக்கிறது. வெப்பம் அதிகரிப்பதால், பனி உருகி வெள்ளமாக பெருக்கெடுக்கும் அபாயம், இன்னும் 25 ஆண்டுகளில் ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.