வடக்கில் போக்குவரத்துக் கட்டுப்பாட்டால் கிறிஸ்மஸ் வியாபாரம் களைகட்டவில்லை
வவுனியா, மன்னார் பிரதேசங்களில் இம்முறை கிறிஸ்மஸ் பண்டிகை வியாபார நடவடிக்கைகள் களை கட்டவில்லை என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். மக்கள் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் இருந்து பொருட்களை எடுத்துவருவதில் ஏற்படும் கெடுபிடிகள் காரணமாக பல வர்த்தகர்கள் தமது வியாபார செயற்பாடுகளைக் குறைத்துள்ளனர். சோதனைச் சாவடிகளில் பொருட்கள் இறக்கி ஏற்றி சோதனையிடும் நடவடிக்கையால் அவற்றை உரிய விலைக்கு விற்க முடியாதிருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அடிக்கடி இடம்பெறும் சுற்றிவளைப்புத் தேடுதல் மற்றும் தொடரும் இராணுவ நடவடிக்கைகளால் பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து அகதிகளாக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கிறிஸ்மஸ் பண்டிகையை அமைதியாகக் கொண்டாடுமாறு கிறிஸ்தவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்து அவற்றை அகதிகளுக்கு வழங்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.