சத்தீஸ்கர் மாநிலத்தில் 16 கிராமவாசிகள் சுட்டுக்கொலை: மாவோயிஸ்டுகள் வெறிச்செயல்…!!
சத்தீஷ்கார் மாநிலத்தின் பல மாவட்டங்களில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் மிகுந்து காணப்படுகிறது. நேற்று மாலை நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள பஸ்தார் வட்டாரப் பகுதியில் நேத்னார், ஆல்பேடா, பார்பா, குண்டலா, மத்பேடா ஆகிய கிராமங்களுக்குள் மாவோயிஸ்டுகள் துப்பாக்கிகளுடன் புகுந்தனர். தங்களை பற்றி போலீசாரிடம் துப்புக் கொடுப்பவர்கள் என்று சந்தேகப்படுபவர்களின் வீடுகளுக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை கண்மூடித்தனமாக துப்பாக்கிகளால் சுட்டுத் தள்ளினர்.
இந்த தாக்குதலில் 16 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். தங்களது வெறியாட்டத்தை முடித்துக் கொண்ட பின்னர் மாவோயிஸ்டுகள் அப்பகுதியில் உள்ள அபுஜ்மார் காட்டுப் பகுதிக்குள் தப்பியோடிவிட்டனர்.
இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும், பஸ்தாரில் இருந்து நூற்றுக்கணக்கான போலீசார் நேத்னார், ஆல்பேடா, பார்பா, குண்டலா, மத்பேடா ஆகிய 5 கிராமங்களுக்கும் விரைந்து சென்றனர். மேலும் கிராமவாசிகளின் பாதுகாப்புக்காக கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து பஸ்தார் ரேஞ்ச், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் எஸ்.ஆர்.பி. கல்லுரி கூறுகையில் ‘‘மாவோயிஸ்டுகள் கிராமவாசிகளை மிரட்டி இந்த கிராமங்களில் தஞ்சம் அடைய முயற்சி செய்துள்ளனர். ஆனால் இவர்களை கிராமவாசிகள் அனுமதிக்காததால் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு சுட்டுக்கொன்றிருக்கிறார்கள்’’ என்றார்.
Average Rating